10084 துகளறு போதம்.

சீகாழிச் சிற்றம்பல நாடிகள் (மூலம்), ஈசான சிவன் (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: திக்கம் செல்லையா, அச்சுவேலி, 1வது பதிப்பு, தை 1950. (பருத்தித்துறை: கலாநிதி யந்திரசாலை).

(6), 50 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ.

துகளறு போதம் என்னும் நூல் 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிற்றம்பல நாடிகள் என்பவரால் எழுதப்பட்டது. மெய்கண்ட சாத்திரம் 14 எனத் தொகுத்துக்காட்டும் ‘உந்தி களிறு’ என்னும் வெண்பாவில் இந்நூல் காட்டப்படவில்லை. எனினும் நாகப்பட்டினம் வேதாசலம் பிள்ளை, 1938-ல் வெளியிட்ட நூல்களில் ஒன்றில், இந்நூலை மெய்கண்ட சாத்திரம் 14-ல் ஒன்றாக இணைத்துக் காட்டியுள்ளார். மதுரைச் சிவப்பிரகாசர், திராவிட மாபாடியம் பாடிய சிவஞான சுவாமிகள் போன்றோர் இந்நூலின் பாடல்களை எடுத்தாண்டுள்ளமை இந்நூலின் சிறப்புகளில் ஒன்று. இந்த நூல் கற்பக விநாயகர் காப்புச் செய்யுளும் 100 வெண்பாக்களும் கொண்டது. இந்த நூலின் நூற்பொருளைக் கூறும் பிற்கால வெண்பாக்கள் இரண்டும் இதில் உள்ளன. ஆசிரியப் பாவாலான இந்நூலின் சிறப்புப் பாயிரம் நூலாசிரியரைக் கங்கைகொண்டாரின் மாணாக்கர் எனக் குறிப்பிடுகிறது. முத்தி பெறுவதற்கு உரிய நெறி என சைவம் காட்டும் நெறி தசகாரியம். சில நூல்கள் தசகாரியங்களை 30 நிலைகளாகக் காட்டுகின்றன. இவ்வாறு சிவபெருமானின் 30 நிலைகளைக் காட்டும் முதல் நூல் இந்தத் துகளறுபோதம் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த நூல் ஞானம், சரியை, கிரியை வழிகளைக் காட்டுகிறது. குருவே சிவம் என்பது இந்நூலின் கோட்பாடு. இந்த நூல் அவ்வப்போது பதிப்பிக்கப்பட்டு வெளிவந்துள்ளது. நாகப்பட்டினம் வேதாசலம்பிள்ளை மேற்பார்வையில் வெளிவந்த பால்வண்ண முதலியார் பதிப்பு, 1898 இலும் சண்முகம்பிள்ளை பதிப்பு 1904 இலும், சமாஜ சித்தாந்த சாத்திரம் முதற்பதிப்பு 1934இலும், திக்கம் செல்லையா என வழங்கும் அச்சுவேலியூர் ஈசானசிவன் இயற்றிய உரையுடன் கூடிய இந்நூல் யாழ்ப்பாணப் பதிப்பாக 1950இலும் வெளிவந்துள்ளன. பின்னதாக திருவாடுதுறை ஆதனப் பதிப்பு 1952இல் வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10701).

ஏனைய பதிவுகள்