10174 மணிவாசக அணியமுதம்.

ஞா.பாலச்சந்திரன். கொழும்பு 6: ஞானம் வெளியீடு, ஞானம் பதிப்பகம், 3B, 46ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2014. (மஹரகம: தரஞ்சி பிரின்ட்ஸ், நாவின்ன).

xvi, 112 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-8354-52-0.

ஞானம் பதிப்பகத்தின் பிரசுரத் தொடரில் 30ஆவது வெளியீடு. தமிழரின் சிவபுராணம் முதல் அச்சொப்பதிகம் ஈறாக 51 பாடற் பகுதிகளைக் கொண்டமைந்த திருவாசகம், மணிவாசகர் என வழங்கப்படும் மாணிக்கவாசகப் பெருமானுடைய இறையனுபவங்களின் தேறல் ஆகும். மணிவாசகர் சராசரி மனித உணர்வுகளுக்குள் வசப்படாத ஆழ்மன அசைவுகளையும் அநுபவத் திளைப்புகளையும் எய்தியவர். அவற்றை வார்த்தைகளுக்குள் வசப்படுத்திக்காட்டியவர். தமிழின் தலையாய கவிஞர்களுள் ஒருவர். இவ்வாறு அவர் தமது மன அசைவுகளையும் திளைப்புகளையும் வெளிக்கொணர்வதற்குத் துணைநின்ற இலக்கிய அணிகளுள் முக்கியமானவை உவமைகளும் உருவகங்களுமாகும். இவ்வாறு அவருக்குத் துணைநின்றுள்ள இவ்விரு அணிகளையும் நுனித்துநோக்கும் செயற்பாடாக அமைந்ததே பாலச்சந்திரனின் மணிவாசக அணியமுதம் என்ற நூலாகும். பக்தியிலக்கியங்களில் முன்னோடி இலக்கியமாகக்; கருதப்படும் திருவாசகம் தொடர்பான இந்நூலாக்கத்திலே முக்கிய அம்சம்அதன் எளிமையான எடுத்துரைப்பு முறையாகும். புனைகதைக்கும், நேர்முக வர்ணனைக்கும் பயன்படும் மொழிநடைகளைஆங்காங்கே அவர் நவீன உதாரண விளக்கங்களுடன் பயன்படுத்தியுள்ளார். அதே வேளை முக்கிய சிந்தனையம்சங்கள் இடம்பெறுமிடங்களில் மரபுசார் நம்பிக்கைகளை அனுசரித்து நின்று நிதானித்து விளக்குகின்றார். இவ்வாறான எடுத்துரைப்பு முறையானது, சமகால இளம்; தலைமுறையினரை மரபுடன் இயைவிப்பதற்கான, மரபுசார் அம்சங்களில் ஆர்வம் கொள்ள வைப்பதற்கான ஓர் உத்தியாகவே பயன்பட்டுள்ளதை உணரமுடிகின்றது. இது பாலச்சந்திரனின் தனித்துவமான எழுத்துத் திறன் எனலாம்.

ஏனைய பதிவுகள்