ந.சிவசண்முகமூர்த்தி (நேர்காணல்), சி.சிவரஞ்ஜனி (நேர்கண்டவர்). தொல்புரம்: சிவகலா மன்றம், 1வது பதிப்பு, மாசி 2013.
x, 36 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.
ஆலயங்களை மையமாகக் கொண்டு இடம்பெற்ற புராணப் படிப்புகளின் பரிணாம வளர்ச்சியாக கதாப்பிரசங்கக் கலை பார்க்கப்படுகின்றது. இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழும் இணைந்த கலவை இது. ஈழத்தில் கதாப்பிரசங்கக் கலையைப் பேணி வந்தவர்களுள் ஒருவர் சுழிபுரம் நடேசன் சிவசண்முகமூர்த்தி அவர்கள். திருமுருக கிருபானந்த வாரியாரைத் தன் மானசீகக் குருவாக ஏற்று வாழ்ந்தவர். அவரது திருவாயினாலேயே நாட்டார் பாடல் இசைச் சக்கரவர்த்தி என்ற பட்டத்தைப் பெற்றவர். ஆசிரியராகப் பணியாற்றிய இவர், இலங்கை வானொலியின் கிராமிய நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். நாட்டார் பாடல்கள், பண்ணிசை, வில்லிசை, கூத்திசை, புராண படனம், கதாப்பிரசங்கம் என விரியும் வெளிப்பாட்டுக் கலைகளில் தன் முத்திரை பதித்த ஆழுமை மிக்கவராகக் கருதப்பட்ட அமரர் சிவசண்முகமூர்த்தியின் நேர்காணல் தொகுப்பாக இந்நூல் அமைகின்றது. இந்நேர்காணலை அவரது மகள் சிவரஞ்சனி மேற்கொண்டுள்ளார். இசைத்துறைகள், கதாப்பிரசங்கம் என்றால் என்ன, கதாப்பிரசங்கமும் அதன் வரலாற்று முறையும், ஈழமணித் திருநாட்டில் கதாப்பிரசங்கத்தின் வளர்ச்சியும் வளர்ச்சிக்காகச் சேவையாற்றியோரும், ஆற்றிவருவோரும், நேரடிச் செவ்வி- திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் பிரதம சீடர், பிரசங்கபூஷணம், கலாபூஷணம் சுழிபுரம் நடேசன் சிவசண்முக மூர்த்தி அவர்களுடன் (நேர்காணல்) ஆகிய விடயத் தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.