செங்கை ஆழியான் (இயற்பெயர்: க.குணராசா). சென்னை 600024: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 32/8-10 ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், 1வது பதிப்பு, டிசம்பர் 2005. (சென்னை 600024: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 32/8-10 ஆற்காடு சாலை).
224 பக்கம், சித்திரங்கள், விலை: இந்திய ரூபா 110., அளவு: 21×14 சமீ., ISBN: 81-89748-06-8.
1972இல் எழுதப்பட்ட நிலமகளைத் தேடி என்ற குறுநாவல் தொடங்கி 2001இல் எழுதப்பட்ட தவமும் வரமும் என்ற குறுநாவல் வரை 10 குறுநாவல்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பழைய வானத்தின் கீழ், முதல் தவறு, ஒரு பௌர்ணமிக் காலம், நிலமகளைத் தேடி, யொகாறா, அக்கினிக் குஞ்சு, சாம்பவி, யாழ்ப்பாணக் கிராமம் ஒன்று, மீண்டும் ஒரு சீதை, வரமும் தவமும் ஆகிய அனைத்தும் 30 ஆண்டுகால இடைவெளியில் எழுதப்பட்ட கதைகள். கொட்டடி, யாழ்ப்பாணம், விசுவமடு, பூநகரி, கிண்ணியா என்று ஈழத்தின் பல இடங்களுக்கும் எம்மை இக்கதைகள் மானசீகமாக அழைத்துச் செல்கின்றன. இக்குறுநாவல்கள் ஈழத்தின் சஞ்சிகைகளிலும் தமிழகச் சஞ்சிகைகளிலும் முன்னர் வெளிவந்தவை. வெளிவந்த காலகட்டங்களில் பலரின் கவனஈர்ப்பினையும் பெற்றவை. பழைய வானத்தின் கீழ், முதல் தவறு, ஒரு பௌர்ணமிக்காலம் ஆகிய மூன்று குறுநாவல்களும் ஈழத்தமிழரின் ஆரம்ப இருப்பினைச் சுட்டுவன. நிலமகளைத் தேடி, அக்கினிக் குஞ்சு, யொகாறா மூன்றிலும் பின்னவை இரண்டும் கடும் விமர்சனத்துக்குள்ளானவை. சாம்பவி, யாழ்ப்பாணக் கிராமமொன்று ஆகிய இரண்டும் கணையாழியில் வெளிவந்து கணிசமான கனதியான வாசகரின் கவனத்தை ஈர்த்தவை. யாழ்ப்பாணக் கிராமம் ஒன்று தி.ஜானகிராமன் நினைவுக் குறுநாவல் போட்டியில் பரிசில் பெற்றுப் பலரின் பாராட்டுக்குமுள்ளானது. மீண்டும் ஒரு சீதை கலைமகள் நடத்திய அமரர் ராமரத்தினம் குறுநாவல் போட்டியில் முதற்பரிசினைப் பெற்றுக்கொண்டது. ஆயிரமாயிரம் ஆண்டுக்கு மேற்பட்ட ஈழத்தமிழர்களுடைய வாழ்க்கைத் தேடல்களின் ஊடாகப் பயணிக்கும் ஓர் அபூர்வ இலக்கிய ரசானுபவம் வாசகருக்குக் கிட்டுவதால் நூலின் தலைப்பும் அதனைப் பிரதிபலிப்பதாக அமைகின்றது.