வ.சு.இராஜ ஐயனார் (மூலம்), மு.கௌரிகாந்தன் (தொகுப்பாசிரியர்). வவனியா: விஞ்சு வெளியீட்டகம், இணை வெளியீடு: வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், 1வது பதிப்பு, மார்ச் 2008. (வவுனியா: மல்ரிவிஷன் அச்சுக் கலையகம்).
xii, 48 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20×14 சமீ.
வவுனியா கல்வியியல் கல்லூரியின் விரிவுரையாளர் மு.கௌரிகாந்தனின் தொகுப்பில் உருவாகியிருக்கும் வ.சு.இராஜஐயனாரின் தூய தமிழ் இலக்கியப் படைப்புகள் இவை. 1936இல் ஈழகேசரி ஆறாவது ஆண்டு மலரிலே இடம்பெற்ற மாயக்குதிரை என்னும் சிறுகதையும் 1939இல் வித்தியாச் சமாச்சாரம் என்ற பத்திரிகையில் வெளியாகிய தமிழரின் வீரச்செயல்கள், தமிழர் நாகரீகம் ஆகிய கட்டுரைகளோடு 1941இல் அங்கு வெளியாகிய குறிஞ்சி நிலம், நெய்தல் நிலம். முல்லை நிலம், மருத நிலம் ஆகிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. இலங்கையில் மொழித்தூய்மை, இலக்கணத்தூய்மை எனும் இரண்டினையும் வலியுறுத்தி வந்தவர்களுள் இராஜ ஐயனாரும் ஒருவர். 1899இல் வவுனியா இராசேந்திரங்குளம் கிராமத்தில் பிறந்த இவர் 1917-21 காலப்பகுதியில் ஏ.பெரியதம்பிப்பிள்ளையுடன் ஒன்றாக சுவாமி விபுலானந்தரிடம் கற்று மதுரைத் தமிழ்ச்சங்க பண்டித பரீட்சையில் சித்தியெய்தியவர். 1936முதல் கோப்பாய் அரசினர் ஆசிரியர் கலாசாலையில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். இந்நூலின் முற்பகுதியில் இடம்பெற்றுள்ள பண்டித ஸ்ரீமத் வ.சு.இராஜஐயனார் அவர்களின்வரலாற்றுச் சுருக்கம் அன்னாரின் வாழ்வையும் பணிகளையும் சுருக்கமாகப் பதிவுசெய்கின்றது. வன்னியின் மூத்த தமிழ் அறிஞராய் விளங்கிய வ.சு.இராஜ ஐயனார் (1899-1954). யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரி மாணவராவார். பயிற்றப்பட்ட ஆசிரியராக யாழ்.சென்.பற்றிக்ஸ், பரமேஸ்வரா கல்லூரிகளில் பணியாற்றி, 1928இல் திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலையிலே தமிழ் விரிவுரையாளரானார்;. பின்னர் சிலகாலம் ஏழாலை மகாவித்தியாலய அதிபராகவும், 1936 முதல் கோப்பாய் அரசினர் ஆசிரிய கலாசாலையில் விரிவுரையாளராகவும் பணியாற்றியவர். இறுதியாக பூண்டுலோயாவில் பாடசாலை அதிபராகப் பணியாற்றிய வேளையில் 1954இல் இறைபதமெய்தியவர்.