செய்கப்துல் காதிறு நெயினார் லெப்பை ஆலிம் புலவர் (மூலம்), புலவர் அல்ஹாஜ் ஆ.மு.ஷரிபுத்தீன் (உரையாசிரியர்). பாணந்துறை: எம்.எம்.உவைஸ், மர்கஸி, ஹேனமுல்ல, 1வது பதிப்பு, ஜுன் 1979. (கொழும்பு 14: எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்;பர்ஸ் சிலோன் லிமிட்டெட், 185, கிராண்ட்பாஸ் வீதி).
(5), 468 பக்கம், விலை: ரூபா 57.50, அளவு: 21.5×14.5 சமீ.
தமிழ் இலக்கியத்தில் இஸ்லாமியத் தமிழர் அருளிய காப்பியங்களுள் புதூ குஷ்ஷாம் முக்கிய இடம் பெறுகின்றது. காயல் பட்டணத்தைச் சேர்ந்த சேகுனாப் புலவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலும் செய்யிதினா அபூ பக்கர் (றலி) அவர்களின் ஆட்சியிலும் செய்யிதினா உமறிப்னு கத்தாப் (றலி) அவர்களின் கலீபாப் பதவிக் காலத்திலும் சிரியா என்று இப்போது வழங்கப்படும் அன்றைய ஷாம் நாடு வெற்றிகொள்ளப்பட்ட நிகழ்ச்சிகளை புதூ குஷ்ஷாம் என்னும் காப்பியத்தில் மிக நுணுக்கமாக விவரித்துள்ளார். சேகுனாப் புலவரின் புதூ குஷ்ஷாம் என்னும் காப்பியம், காண்டம் மகம்மதிய்யா (11 படலங்களில் 965 திருவிருத்தங்கள்), காண்டம் சித்தீக்கிய்யா (13 படலங்களில் 1737 திருவிருத்தங்கள்) , காண்டம் பாறூக்கிய்யா (37 படலங்களில் 4115 திருவிருத்தங்கள்) என்னும் முப்பெரும் காண்டங்களாக வகுக்கப்பட்டுள்ளது. காண்டம் பாறூக்கிய்யாவில் இடம்பெற்றுள்ள குறித்த சில திருவிருத்தங்களுக்கு மருதமுனை அல்ஹாஜ் ஆ.மு. ஷரிபுத்தீன் புலவர் அவர்கள் அன்வயம், பொருள், விளக்கக் குறிப்பு என்பவற்றைக் கொண்டதாக சிறந்த உரை எழுதியுள்ளார். எறுமூக்கிற் பாசறை வகுத்த படலம், ஜபலா முதற்போர்புரி படலம், ஐவர் சிறை மீட்ட படலம், மாகான் முதற் போர்புரி படலம், திருமுகம் பெற்ற படலம், இரண்டாம் போர்புரி படலம், மூன்றாம் போர்புரி படலம் ஆகிய ஏழு இயல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 20384).