இ.முருகையன் (தமிழாக்கம்), த.கலாமணி, கயிலைநாதன் திலகநாதன் (பதிப்பாசிரியர்கள்). வல்வெட்டித்துறை: ஜனனி வெளியீட்டகம், புதுவளவு, பொலிகண்டி, 2வது பதிப்பு, ஜுலை 2007. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, ½ டாம் வீதி).
51 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 22×14.5 சமீ.
உலகப்பெரு நாடகாசிரியர்களுள் ஒருவரான சொஃபொக்கிளிஸ் எழுதிய அன்ரிகனி (Antigone – Ancient Greek Tragedy written in or before 441 BC by Sophocles) நாடகத்தை கவிஞர் இ.முருகையன் ‘கர்வபங்கம்’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்து வழங்கியுள்ளார். இந்நாடகம் ஈடிப்பசு மன்னனின் நான்கு பிள்ளைகளுள் ஒருத்தியும் பேருணர்ச்சி மிக்கவளுமான அன்டிகனி பற்றியதாகும். கிரேக்க நாடகம் பல நூற்றாண்டுகாலம் படிப்படியாக வளர்ச்சிகண்டு, இறுதியில் கி.மு. 5ஆம் நூற்றாண்டில் அதன் உச்ச நிலையை அடைந்தது. இந்த நீண்ட மலர்ச்சியில்; மிகச் சிறந்த அவலச்சுவை நாடகாசிரியராக நின்றவர் சோஃபகிளீஸ் (கி.மு.495/96-406) ஆவார். பல வழிகளில் கிரேக்க அவலச்சுவை நாடகத்தின் வளர்ச்சிக்காகப் பணியாற்றிய இவர் 120 நாடகங்களுக்கு மேல் எழுதியுள்ளார். இலங்கைக் கல்வித்துறையில் 2008ஆம் ஆண்டு க.பொ.த.(உயர்தர) வகுப்புக்குரிய நாடகமும் அரங்கியலும் பாடநெறிக்கான பாடத்திட்டத்தில் சொஃபொகிளிசின் அன்ரிகனி என்னும் அவலச்சுவை நாடகபாடம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்நூல் அம்மாணவர்களின் தேவை கருதி வெளியிடப்பட்டுள்ளது. இந்நாடகத்தின் முதலாவது பதிப்பு சமகாலத்தில் யாழ்ப்பாணம், ஷாம்பவி அச்சகத்தின் அச்சுப் பதிப்புடன் அல்வாய் வட-மேற்கு, கலை அகம் வெளியீட்டகத்தின் வாயிலாக வெளிவந்துள்ளதாகவும் க.பொ.த. உயர்தர மாணவர்களின் தேவை கருதி கொழும்பு குமரன் பதிப்பகத்தின் வாயிலாக மீள்பதிப்புக் காண்பதாகவும் பதிப்புரையில் கண்டறியமுடிகின்றது.