மார்க்கண்டன் ரூபவதனன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xxii, 270 பக்கம், விலை: ரூபா 800., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-476-8.
ஆணல்ட் சதாசிவம்பிள்ளை அவர் எழுதிய பிரபல்யமான நூலான ‘பாவலர் சரித்திர தீபகத்திற்காக’ மாத்திரம் நினைவுகூரப்படவேண்டியவரல்ல. அவரது தமிழ்ப்பணிகள் பன்முகத்தன்மை கொண்டவை. கிறிஸ்தவ இலக்கியம், அற இலக்கியம் உள்ளிட்ட மரபிலக்கியப் பணிகள், நவீனஉரைநடை இலக்கியப் பணிகள், அறிவியல் தமிழ்ப்பணிகள், தமிழின் முதலாவது பத்திரிகையான உதயதாரகையின் ஆரம்பகால ஆசிரியராக 37 ஆண்டுகள் (1857-1895) கடமையாற்றித் தமிழ் இதழியல்துறைக்குச் செய்த பணிகள், நவீன உரைநடைச் செல்நெறியில் தமக்கெனத் தனித்தளத்தில் இயங்கியதுடன், தமிழ்மொழி நவீனமயமாக்கலில் வழங்கியுள்ள பங்களிப்புகள் என அவர் குறித்து நோக்கப்படவேண்டியவை பல உள்ளன. இவற்றை இந்நூல் விபரிக்கின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டுப் பின்னணியில் ஆணல்ட் சதாசிவம்பிள்ளை, கிறிஸ்தவ இலக்கியப் பணிகள், அற இலக்கியப் பணிகள், தமிழ் இதழியல்துறைப் பணிகள், ஈழத்தில் தமிழ் நவீனமயமாக்கமும் ஆணல்ட் சதாசிவம்பிள்ளையும், அறிவியல் தமிழ்ப் பாடநூலாக்க முயற்சிகள், தொகுப்புரை ஆகிய ஏழு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நூலாசிரியர் மார்க்கண்டன் ரூபவதனன் இலங்கை ஊவா வெல்லஸ்ஸப் பல்கலக்கழக முதுநிலை விரிவுரையாளர். தனது ஆரம்பக் கல்வியை அளவெட்டி ரோமன் கத்தோலிக்கத் தமிழ்ப் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியிலும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் கலை இளமாணி, முது தத்துவமாணிப் பட்டங்களையும் பெற்றவர்.