வை.க.சிற்றம்பலம். இணுவில்: புலவர் வை.க.சிற்றம்பலம், 1வது பதிப்பு, 1997. (இணுவில்: சாயி அச்சகம்).
12 பக்கம், விலை: ரூபா 20., அளவு: 20.5×13.5 சமீ.
இணுவில் சிவகாமியம்மன் பேரில் புலவர் வை.க.சிற்றம்பலம் அவர்கள் பாடிய பக்தி இலக்கியங்களான இடர்களை பதிகமும் திரு வருக்கமாலையும் சிறு நூலுருவில் வெளியிடப்பட்டுள்ளன. முதுபெரும்புலவர் வை. க. சிற்றம்பலம் இணுவில் கிராமத்தில் 1914ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 16ம் திகதி பிறந்தவர். இணுவிலில் பிறந்தாலும் அளவெட்டி மண்ணில் மணம் முடித்து அளவெட்டியிலேயே நிரந்தரமாக வாழ்ந்தவர். ஆரம்பத்தில் தமிழ் ஆசிரியராக இவர் கடமை புரிந்தார். தமிழ்மொழியில் திறமை வாய்ந்தவராக இருந்த போதும் அவர் செய்யுள் இயற்றும் வன்மையுடையார் என்பது அவரது முதுமைக்காலம் வரை இலைமறைகாயாகவே இருந்து வந்துள்ளது. ஓய்வுபெற்ற பின் சிற்றம்பலம் அவர்கள் செய்யுள் இலக்கணத்தையும் பாட்டியல் இலக்கணத்தையும் நன்கு கற்று செய்யுள் இயற்றலில் தீவிரமாக ஈடுபட்டார். ஓசைநயம், பொருள்நயம், இலக்கணநயம் அமைந்து இவரது செய்யுள்கள் சிறப்புற விளங்குகின்றன. இவர் செய்த சுவாமி விபுலானந்தர் நான்மணி மாலை மற்றும் நல்லூர் இரட்டை மணிமாலை என்பன கொழும்புத் தமிழச் சங்கத்தாரின் முதற்பரிசினையும் இவருக்கு பெற்றுக்கொடுத்தது. இவர் பாடல்கள் தமிழறிவு குறைந்தவர்களுக்கும்; இலகுவாக விளங்கும் தன்மை வாய்ந்தவை. புலவர் அவர்களுக்கு 2002ம் ஆண்டு இலங்கை இந்து கலாச்சார திணைக்களம் கலாபூசணம் விருது வழங்கி கௌரவித்தது. முதுபெரும்புலவர், கலாபூஷணம், புலவர்மணி, கவியோகி, மரபுக்கவிஞர் எனப் புகழ்பெற்ற புலவர்.வை.க.சிற்றம்பலம் தனது 101 வயதில் 02.11.2015 இல் அமரத்துவமடைந்தார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 16977).