தேவராய சுவாமிகள் (மூலம்), நாக.சண்முகம் (உரையாசிரியர்). காரைநகர்: திக்கரை முருகமூர்த்தி கோவில் திருப்பணிச் சபை, திக்கரை, 1வது பதிப்பு, நவம்பர் 1989. (யாழ்ப்பாணம்: ஸ்ரீகாந்தா அச்சகம், 213, காங்கேசன்துறை வீதி).
34 பக்கம், விலை: ரூபா 3.50, அளவு: 17.5×11 சமீ.
கந்த சஷ்டி கவசம் என்பது பால தேவராய சுவாமிகளால் முருகப் பெருமான் மீது இயற்றப்பட்ட பாடலாகும். ‘காக்க’ என இறைவனை வேண்டிக்கொள்ளும் பாடல்களைக் கவசம் என்பர். பிற்காலத்தில் தமிழில் அச்சிடப்பட்டு வழங்கும் கவச நூல்கள் ஆறு. அவற்றில் இந்த நூல்தான் பெரிதும் போற்றப்படுகிறது. இதில் எழுத்து மந்திர உச்சாடணங்கள் உள்ளன. பலர் இதன் பாடல்களை மனப்பாடம் செய்து போற்றி வழிபடுகின்றனர். பழனி முருகன்மீது பாடப்பட்டது. பாடல் வரிகளில் யாருக்காக, யாரைக்குறித்து, யாரால், அல்லது பாடுபவர் பெயரை பாடல் வரிகளில் எழுதுவது அக்கால மரபு என்கின்றனர். நூலின் காலம் 16ஆம் நூற்றாண்டு. கந்த சஷ்டி கவசத்தை பால தேவராய சுவாமிகள் அரங்கேற்றிய தலம் தமிழகத்தில் ஈரோடு அருகில் உள்ள சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். கந்த சஷ்டி கவசத்தில் வரும் ’சிரகிரி வேலவன்’ எனும் வரிகள் சென்னிமலை இறைவனைக் குறிப்பவை. அருள்திரு தேவராய சுவாமிகள் இயற்றிய கந்தர் சஷ்டி கவசமும் அதற்குத் தமிழகப் புலவர் நாக. சண்முகம் எழுதிய விளக்கவுரையும், நூற்றியெட்டுப் போற்றிகளும் இணைந்ததாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள காந்தளகம் வெளியீட்டின் விநியோகப் பொறுப்பினை ஏற்றிருந்தது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10179).