பண்டிதர் சி.அப்புத்துரை. கொழும்பு 13: செல்வி சுஷாந்தினி இராஜேந்திரம் அவர்கள் அமரத்துவ ஓராண்டு நிறைவு வெளியீடு, சிவானந்த வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2001. (கொழும்பு 12: நிசான் பிரின்டர்ஸ், 64 என், பீர் சாஹிபு வீதி).
x, 22 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×12.5 சமீ.
கொழும்பு மாநகரில், கொட்டாஞ்சேனை சந்தியிலிருந்து 50 மீற்றர் தொலைவிலே அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலயம். இவ்வாலயம் 1890 ஆம் ஆண்டுக்கு முற்பட்டது. இவ்வாலயம் எல்லாள மன்னன் காலத்திற்கு முந்தியதென்றும் போர்த்துக்கேயர் காலத்தில் அவர்களது இராணுவ வீரர்கள் இந்த ஆலயத்தை அழித்து விட்டார்கள் என்றும் கருத்துக்கள் உண்டு. முதலாவது உலக மகா யுத்தம் ஆரம்பமாகவிருந்த வேளையில் இப்பகுதியில் 1913 இல் ஓர் இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த முகாமில் வட இந்தியாவைச் சேர்ந்த சண்முகர்ஜீ பட்டேல் என்பவர் தலைமையை ஏற்று பணிபுரிந்துகொண்டிருந்தார். அவர் விநாயகர் வழிபாட்டில் மிகுந்த ஈடுபாடு உடையவர் எனவே அரச மரத்தடியில் அமர்ந்து அருள்பாலித்த வரதராஜ விநாயகப் பெருமானை வழிபடும் முறைமை அவருக்கும் உரியதாயிற்று. 1917 ஆவணியில் விநாயகரின் திருவுருவச் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபடும் முறைமையை சண்முகர்ஜி பட்டேல் ஏற்படுத்தி கொடுத்தார். இந்த காலகட்டத்தில் பிக்கரிங்ஸ் வீதியில் பஞ்சலோக வேலை செய்யும் ஆசாரியர் வாழ்ந்து வந்தனர். இவர்களும் வரதராஜ விநாயகர் மீது தீவிர பக்தி கொண்டனர். 1921 இல் சண்முகர்ஜி பட்டேலுக்கு நாட்டை விட்டு போக வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர் தமக்கு உதவியாளராக இருந்த பஞ்சலோக ஆசாரியர் சமூகத்தைச் சேர்ந்த இராமகிருஷ்ணன் என்பவரிடம் ஆலயத்தை ஒப்படைத்து விட்டுச் சென்றார். இரண்டாவது உலக மகா யுத்த நெருக்கடிகளுடன் பிக்கரிங்ஸ் வீதியில் இருந்த ஆசாரியர் 1943 இடம்பெயர்ந்தனர். அதனால் விநாயகராலய பரிபாலனம் சில ஆண்டுகள் கவனிப்பார் அற்றிருந்து. 1944.08.27 இல் எழுந்தருளி விநாயகர் திருவுருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. கவனிப்பாரற்று ஒழுங்கற்ற முறையில் இருந்த ஆலயத்தை திருமதி சொர்ணம்மா சுப்பிரமணியம் அர்ச்சகர் ஒருவரை நியமித்து பூஜை முறைகளை ஒழுங்காக்கினார். 1951 இல் பரிபாலன சபை ஸ்தாபிக்கப்பட்டது. 1952 இல் சிவஸ்ரீ நடராசா சோமஸ்கந்தக் குருக்கள் பூசை நடைமுறைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். 1961 இல் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு 1962.07.10இல் முதலாவது மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. 1988 நவம்பர் 27இல் இரண்டாவது மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இத்தகைய வரலாற்றுப் பின்புலத்தைக் கொண்ட மேற்படி கோவில்மீது பாடப்பெற்ற விநாயகர் சதகம் இதுவாகும். அமரர் செல்வி சுஷாந்தினி இராஜேந்திரம் அவர்கள் அமரத்துவ ஓராண்டு நிறைவு வெளியீடாக 15.08.2001 அன்று இந்நூல் வெளியிடப்பட்டது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24552).