சுன்னாகம் காசி அ.வரதராஜ பண்டிதர் (மூலம்), உடுப்பிட்டி ம.குமாரசூரியப் பிள்ளை (உரையாசிரியர்). உடுப்பிட்டி: பிரம்மஸ்ரீ ச.சோமசுந்தரையர், 2வது பதிப்பு, ஆண்டு விபரம் இல்லை, 1வது பதிப்பு, 1913. (அச்சக விபரம் தரப்படவில்லை).
304 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ.
சிவராத்திரி புராணம் சிவராத்திரி விரத சரிதையை கூறும் நூலாகும். ‘நைமியசாரணியத்திலுறையும் மாதவர் வேண்டச் சூத முனிவர் கூறுவதாக’ புராணம் இயங்குகின்றது. சிவராத்திரி விரதத்தின் தோற்றத்தையும், அதனை தோற்றிடும் வகையினையும் கூறிய சூத முனிவர், தொடர்ந்து சிவராத்திரி விரதத்தாற் பலனடைந்த சுகுமாரன், அங்குலன், சவுமினி, கன்மாடபாதன், விபரிசன், குபேரன், சாலிகோத்திரன் ஆகியோருடைய கதைகளை விரிந்துரைக்கும் வகையில் இந்நூல் செய்யப்பட்டுள்ளது. காப்புச் செய்யுள் ஒன்றினையும், கடவுள் வாழ்த்துப் பாக்கள் இருபதினையும், பாயிரச்செய்யுள் மூன்றினையும், சிவராத்திரி யுற்பவச் சருக்கம் முதலாகச் சாலி கோத்திரச் சருக்க மீறாகவுள்ள ஒன்பது சருக்கங்களிலுமுள்ள 691 பாடல்களையுங் கொண்டு விளங்கும் இச்சிவராத்திரி புராணம். இந்நூலின் தற்சிறப்புப் பாயிரத்தின்படி, சிதம்பரத்திலுள்ள அறிஞர் பலரின் வேண்டுகோளை நிறைவேற்றும் பொருட்டு இது செய்யப்பட்டதெனத் தெரிகின்றது. இதற்கு முன்னரும் பலர் சிவராத்திரி புராணம் செய்திருந்த போதும், ‘ஆகம நூன்மொழி வழாம’ இச் சரிதை யமையவேண்டுமென்ற நோக்குடன் இது செய்யப்பட்டதாக இதன் ஆசிரியர் கூறுவார். இப்புராணத்திற்கு சின்னத்தம்பிப் புலவர் தந்த நூற்சிறப்புப் பாயிரத்திலிருந்து, இதனை இயற்றியவர் வரதபண்டிதரென்று தெரிகின்றது. 1878இல் இதன் முதற் பதிப்பு நிகழ்ந்ததென எப்.எக்ஸ்.சி.நடராசாவின் ஈழமும் தமிழும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2512).