சிவப்பிரகாச சுவாமிகள். சுன்னாகம்: தனலக்குமி புத்தகசாலை, 1வது பதிப்பு, 1936. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(8), 151 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 21×13.5 சமீ.
சிவப்பிரகாச சுவாமிகள் (துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்) ஒரு சிற்றிலக்கியப் புலவர். இவர், ‘கவி சார்வ பௌமா’, ‘நன்னெறி சிவப்பிரகாசர்’, ‘துறைமங்கலம் சிவப்பிரகாசர்’ஹ என்று பலவாறாக அழைக்கப்பட்டவர். தமிழகத்தில் சைவசமய வளர்ச்சிக்கு வித்திட்ட சமய குரவர்களான சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வருக்கும் ‘நால்வர் நான்மணி மாலை’ என்ற கவிதை நூலை இவர் எழுதினார். தொண்டை நாட்டின் காஞ்சிபுரத்தில் வேளாளர்களின் ஞானகுருவாக விளங்கியவர் குமாரசாமி தேசிகர். இவரே சிவப்பிரகாசரின் தந்தையாவார். மக்களின் கல்விப் பருவத்திலேயே, குமாரசாமி தேசிகர் இறந்தமையால் சிவப்பிரகாசர் தம் தம்பியரொடு திருவண்ணாமலை சென்று, அங்கு தெற்கு வீதியிலுள்ள திருமடத்தில் எழுந்தருளியிருந்த குருதேவரைக் கண்டு வணங்கி அங்கேயே இருந்துகொண்டு தாம் கற்கவேண்டிய நூல்களைக்கற்று வந்தார். அங்கிருந்தவேளை, திருவண்ணாமலையை வலம்வரும்பொழுது, இறையருளால் ‘சோணசைலமாலை’ என்னும் நூலை நூறுபாக்களாக இயற்றிப்பாடி இறைவனை வணங்கினார். இறுதியாக, நல்லாற்றூரையடைந்து, சிவநாம மகிமை, அபிசேகமாலை, நெடுங்கழிநெடில், குறுங்கழிநெடில், நிரஞ்சனமாலை, கைத்தலமாலை முதலிய நூல்களையும், சீகாளத்திப் புராணத்தில் கண்ணப்ப சருக்கம், நக்கீரர் சருக்கம் ஆகியவற்றையும் பாடி முடித்துத் தன் முப்பத்திரண்டாம் அகவையில் புரட்டாசிப் பௌர்ணமியில் இட்டலிங்கப் பரசிவத்தில் காலமானார். இந்நூல் அவரது கண்ணப்ப சருக்கம், நக்கீரர் சருக்கம் ஆகியவற்றுக்கான உரையுடன் கூடியதாக வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கங்கள் 961, 428).