க.இரகுபரன், தேவகுமாரி ஹரன் (பதிப்பாசிரியர்கள்). கொழும்பு 4: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1 காலி வீதி, 1வது பதிப்பு, 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை).
x, 119 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18 சமீ.
1992 முதல் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆண்டுதோறும் ஆய்வரங்குகளை ஒழுங்குசெய்து நடத்தி வருவதுடன் அவ்வாய்வரங்கக் கட்டுரைகளைத் திரட்டி கட்டுரைகளை நூல்வடிவிலும் வெளியிட்டு வருகின்றது. அவ்வகையில் 21ஆவது ஆய்வரங்கு ‘பன்முக நோக்கில் பதினொராம் திருமுறை’ என்னும் தலைப்பில் இடம்பெற்றது. திருநாரையூர் நம்பியாண்டார் நம்பிகள் தொகுத்த பதினொராம் திருமுறை பன்னிரு சான்றோர்களால் இயற்றப்பெற்ற நாற்பது சிற்றிலக்கியங்களைத் தன்னகத்தே கொண்டு சைவ பிரபந்தத் திரட்டாய் பொலிந்து நிற்கின்றது. ஏனைய திருமுறைகளுக்கு இல்லாத சிறப்பு ஒன்று இதற்கு உண்டு. ஆலவாய் இறைவர் இயற்றிய திருமுகப் பாசுரம் இந்த தொகை நூலின் முதலில் திகழ்கிறது. இவ்வாய்வரங்கின் முன்னோடியாக வெளிவந்துள்ள இம்மலரில் வித்துவான் க.வெள்ளைவாரணன் எழுதிய பதினொராந் திருமுறை, திருக்கயிலாய ஞானவுலா, திருமுருகாற்றுப்படை, திருவாலவாயுடையார், கோபப் பிரசாதம், கல்லாட தேவ நாயனார், கபிலதேவ நாயனார், பரணதேவநாயனார், இளம்பெருமானடிகள் ஆகிய கட்டுரைகளுடன், பதினொராந் திருமுறையில் இலக்கிய வகை (சோ.ந.கந்தசாமி), நம்பியாண்டார் நம்பி (மு.அருணாசலம்), காரைக்காலம்மையார் (க.நா.சுப்ரமண்யம்), காரைக்கால் அம்மையார் பாடல்களில் கடவுட்கொள்கை (மேகலா சிவகுமாரன்), அழியாத அன்பின் மேலீடாய் பதினொராம் திருமுறை (ச.ஹோபிநாத்) ஆகிய 14 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.