அப்துல் காதர் லெப்பை. கொழும்பு: துறைமுகங்கள் அபிவிருத்தி, முஸ்லீம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2002. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44, புகையிரதநிலைய வீதி).
vi, 90 பக்கம், விலை குறிப்பிடப்படவில்லை. அளவு: 21×14 சமீ., ISBN: 955-8806-07-2.
சிறந்த சிந்தனையாளரும், கவிஞருமான கவிஞர் அப்துல் காதர் லெப்பை (1913-1984) கிழக்கிலங்கையின் காத்தான்குடிக் கிராமத்தைத் தாயகமாகக் கொண்டவர். இருபதாம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க ஈழத்து முஸ்லிம் கவிஞர்களுள் ஒருவர். இவர் 1913 செப்டெம்பர் 7 ஆம் நாள் காத்தான்குடியில் பிறந்தார். 1934 ஆம் ஆண்டு பாடசாலை ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கிய இவர் 1943 ஆம் ஆண்டில் தலைமையாசிரியராகப் பதவியுயர்வு பெற்றார். 1965 ஆம் ஆண்டு கிண்ணியாவில் நடைபெற்ற இஸ்லாமியக் கலை இலக்கிய விழாவில் இவருக்கு ‘கவிஞர் திலகம்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. உமர் கய்யாம் பாடல்களின் மொழிபெயர்ப்பான ‘ரூபாய்யாத்’ இவருக்கு இலங்கை சாஹித்திய மண்டலப் பரிசைப் பெற்றுக் கொடுத்தது. 1984 அக்டோபர் 7 ஆம் நாள் அமரத்துவமடைந்த இக் கவிஞரால் எழுதப்பெற்று அச்சுருவில் வெளிவராதிருந்த எதிரொலி, மறையந்தாதி, நவீன சிந்தனைகள் ஆகியவற்றின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. ஒரு ஆசிரியராகப் பணியாற்றிய இவர் கல்வித்துறையினரால் பெரிதும் போற்றப்பட்டவர். அமரர் அப்துல் காதர் லெப்பை ஒரு கவிஞராகவும் ஆழமான சிந்தனையாளராகவும் விளங்கியவர். இஸ்லாமியரிடையே ஏகத்துவம் எனப்படும் தௌஹீதின் பூரணத்துவத்தை இலக்கியச் சாந்துபூசி மக்கள் மத்தியில் கொண்டு சென்றவர். மௌலானா றூமி, அல்லாமா இக்பால், ஜலாலுதீன் ஆப்கானி போன்றோரின் தௌஹீத் பற்றிய சிந்தனைகளின்பால் ஈர்க்கப்பட்டு அவற்றினைத் தன் கவிவல்லமையால் பாக்களாக ’எதிரொலி’யில் வழங்கியுள்ளார். துறைமுகங்கள் அபிவிருத்தி, முஸ்லீம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சு இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் ஆதரவுடன் 2002 ஒக்டோபர் 22,23,24ஆம் திகதிகளில் கொழும்பில் நடாத்திய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் இந்நூல் வெளியிடப்பட்டது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 27427).