தமயந்தி. நோர்வே: உயிர்மெய் பதிப்பகம், Kaptein Linkes vei 9A, 6006 Aalesund, 1வது பதிப்பு, 2014. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).
xv, 50 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5 சமீ.
ஏகலைவன் மகாபாரதக் கதாபாத்திரங்களுள் ஒருவன். மகத நாட்டைச் சேர்ந்த இவன் பிறப்பினால் ஒரு வேடன். வில் வித்தையில் தேர்ந்தவனாக வர எண்ணி துரோணரிடம் சென்றான். அவன் சாதியில் தாழ்ந்த வேடுவன் என்பதால் அதை வெளிக்காட்டாமல், தனக்கு நேரமில்லை என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார். ஏகலைவன் தன் இல்லம் திரும்பித் துரோணரைப் போல ஒரு சிலை செய்து அதையே குருவாகக் கொண்டு பயிற்சியை மேற்கொண்டான். ஒரு நாள் ஏகலைவன் மிகவும் சிரத்தையோடு வில் வித்தை கற்றுக்கொண்டிருந்தபோது நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. அவன் கவனம் சிதறியது, குரைப்புச் சத்தம் வந்த திக்கை நோக்கி அம்புகளை எய்தான், அம்புகள் எல்லாம் நாயின் வாயைச் சுற்றித் தைத்து குரைக்க முடியாதபடி செய்தது. நாய் அருச்சுனனை நோக்கி ஓடியது. நாயைக் கண்ட அருச்சுனன் அதை இழுத்துக் கொண்டு போய் துரோணரிடம் காண்பித்து ‘என்னை உலகிலேயே மிகச் சிறந்த வில் வீரனாக ஆக்குவேன் என்றீர்கள், இந்த அற்புதத்தைச் செய்தவன் நிச்சயம் என்னைவிடச் சிறந்தவனாக இருக்க வேண்டும். இது எப்படி சாத்தியம்’ என்று துரோணரிடம் கேட்டான். அதிர்ச்சியும், ஆச்சரியமும் கொண்ட துரோணர் ஏகலைவன் இருந்த இடத்திற்கு வந்தார். அங்கே தன்னைப் போல் ஒரு சிலை இருப்பதையும் அதற்கு எதிரே ஏகலைவன் வில்லுடன் நிற்பதையும்; கண்டார். துரோணர் நாயைக்காட்டி ‘இதை யார் உனக்கு கற்றுத் தந்தது’ என்று கேட்டார். ‘நீங்கள் தான் ஆசி வழங்கி என்னுள் இருந்து கற்றுத் தந்தீர்கள்’ என்றான் ஏகலைவன். துரோணர் ஏகலைவனிடம் கபடத்தனமாக, ‘என்னால் வில் வித்தை கற்றுக்கொண்டதால் எனக்கு குருதட்சணையாக உனது வலதுகைக் கட்டைவிரலைத் தா’ என்றார். ஒரு கணம் கூடத் தாமதிக்காமல்; தனது வலதுகைக் கட்டைவிரலை வெட்டி துரோணரின் காலடியில் வைத்தான் ஏகலைவன். ஏகலைவ பாத்திரம் என்பது அன்றைய காலத்தில் மையநிலை மனிதர்கள் விளிம்புநிலை மனிதர்களைப் பயமுறுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட படைப்பு. கற்றலைப் போல போர்க்கலைகளைக் கற்பதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியாகத் திட்டமிட்டு மறுக்கப்பட்டுவந்துள்ளது. இதன் தொடர்ச்சியில் ‘மறைந்திருந்து கற்றலும் தண்டனைக்குரியதே’ என்பதைப் புலப்படுத்துவதாகவே ஏகலைவன் பாத்திரம் அமைகின்றது. இந்நூலில் ஒரு மாற்றுப் பார்வையில் ஏகலைவன் கதை தென்மோடிக் கூத்தாக புனையப்பெற்றுள்ளது. இதில் ஏகலைவன் இறுதிக்காட்சியில் கட்டைவிரலைத்தர மறுக்கிறான். ‘உங்கள் உள்ளெண்ணம் குரோதமானது, சதி நிறைந்தது, வரலாறு துரோணரின் துரோகத்தை இழித்துரைக்கும், என்னையும் மூடனென நகைத்துரைக்கும். நான் தரும் குரு காணிக்கையால் இந்த இரண்டு தவறுகளும் நிகழவேண்டாம். நீங்கள் சென்று வாருங்கள்’ என்று மாற்று முடிவைக் கூத்துக்குத் தருகிறான். ஏகலைவன், துரோணர், அர்ச்சுனன், அஸ்வத்தாமன், எகலைவனின் தந்தை, இரண்டுகட்டியர்கள் என குறைவான பாத்திரங்களுடன் இக்கூத்து உருவாக்கப்பட்டுள்ளது.