11400  யாப்பருங்கலக் காரிகை குமாரசுவாமிப் புலவர் உரை.

அமிர்தசாகரர் (மூலம்), குமாரசுவாமிப் புலவர் (உரையாசிரியர்), க.இரகுபரன் (பதிப்பாசிரியர்).  கொழும்பு 7: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், இல. 98, வோட் பிளேஸ், 4வது பதிப்பு, மே 1999, 1வது பதிப்பு, 1908, 2வது பதிப்பு, 1925, 3வது பதிப்பு, 1938. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B புளுமென்டால் வீதி).

xxiv, 230 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21.5×14 சமீ.

தமிழ் இலக்கண நூல்களிலே மிகவும் பழமையான நூலாகிய தொல்காப்பியத்திலேயே யாப்பிலக்கணம் கூறப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி அதிலே கூறப்பட்டுள்ளவை பல இன்றும் வழக்கில் இருந்துவருகின்றன. இருந்தாலும், பிற்காலத்தில் புழக்கத்துக்கு வந்த பாவினங்களிற் சில அக் காலத்தில் இல்லாதிருந்தமையால் தொல்காப்பியத்தில் இவற்றுக்குரிய இலக்கணங்கள் கூறப்படவில்லை. இதனால் பிற்காலத்தில் ஏற்பட்ட யாப்பிலக்கண வளர்ச்சிகளையும் உட்படுத்தி எழுந்த யாப்பிலக்கண நூல்களிலே யாப்பருங்கலக் காரிகை சிறப்பானது. இந்நூலே இன்று யாப்பிலக்கணம் பயில்வோரால் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நூற் பெயருக்குப் பலர் பல விதமாக விளக்கம் கூறுகின்றனர். யாப்பெனும் கடலைக் கடக்கும் தோணி போன்றது எனப் பொருள்படும் ‘யாப்பருங்கலம்” என்னும் நூலுக்கு உரைபோல் அமைந்ததன் காரணமாகவே யாப்பருங்கலக் காரிகை என்னும் பெயர் ஏற்பட்டதாகச் சிலர் கூறுகிறார்கள். சமண சமயம் தொடர்பான திரமிள சங்கத்தின் உட்பிரிவுகளுள் ஒன்றான அருங்கலான்வயம் எனும் பிரிவைச் சேர்ந்த இந் நூலாசிரியர் தானெழுதிய நூல்களுக்கு யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை எனப் பெயரிட்டிருக்கக் கூடுமெனக் கூறுவாரும் உளர். யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை என்னும் இரு நூல்களையும் இயற்றியவர் ‘அமுதசாகரர்” என்பவராவார். இவர் சமண சமயத் துறவியாவார். அமுதசாகரரின் ஆசிரியர் பெயர் குணசாகரர் என்பதாகும். குணசாகரரே இந்நூலுக்கு உரையாசிரியருமாவார். அமுதசாகரர் பாண்டிய நாட்டில் பிறந்து வளர்ந்து, கழுகுமலையில் ஆசிரியர் குணசாகரரிடம் பயின்று, பிற்காலத்தே தொண்டை நாட்டிற்கு வந்து தங்கி வாழ்ந்திருக்கின்றார். கி.பி 1070 – 1120 வரையான காலத்தைச் சேர்ந்த முதலாம் குலோத்துங்க சோழனுடைய கல்வெட்டொன்றையும் பிற ஆதாரங்களையும் வைத்து இந் நூல் எழுதிய காலம் பதினோராம் நூற்றாண்டின் முற்பகுதி என்று ஆய்வாளர் கூறுகின்றனர். இந்நூல் உறுப்பியல் (செய்யுள் உறுப்புக்களான எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்பன பற்றிய இலக்கணங்களைக் கையாள்கிறது), செய்யுளியல், (பாவகைகள், பாவினங்கள், அவற்றுக்குரிய ஓசைகள் முதலானவற்றின் இலக்கணங்களைக் கூறுகின்றது) ஒழிபியல் (முதலிரு இயல்களில் கூறப்படாத யாப்பிலக்கணச் செய்திகளும் நூற்பாக்களும் கூறப்படுகின்றன) ஆகிய மூன்று இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Beautiful Interracial Couples

Beautiful Interracial Couples There is no doubt that more people than ever before are dropping the differences and falling in love with someone who differs

16853 அல்லையூரின் அமரஞானி.

ரவீந்திரன் ஜெயபாலினி, ஜோ. மல்லூரி (தொகுப்பாசிரியர்கள்). பிரான்ஸ்: செல்லத்துரை தவவிநாயகம் நினைவுக் குழு, 1வது பதிப்பு, மே 2001. (அச்சக விபரம் தரப்படவில்லை). 478 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ.