அகளங்கன். வவுனியா: முத்தமிழ் கலாமன்றம், பம்பைமடு, 1வது பதிப்பு, ஆவணி 1989. (யாழ்ப்பாணம்: உமா பிறின்டர்ஸ், 32, நல்லூர் குறுக்கு வீதி).
(8), 40 பக்கம், விலை: ரூபா 12.00, அளவு: 18.5×14 சமீ.
மகாபாரதத்தின் துணைக் கதைகளுள் ஒன்றான, நிடத நாட்டை ஆண்ட நளன் என்னும் மன்னனின் கதையைத் தமிழில் கூற எழுந்ததே நளவெண்பா ஆகும். இதனை எழுதியவர் 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழேந்திப் புலவர் என்பவராவார். இதன் பெயர் சுட்டுவது போல், இந் நூல் வெண்பாக்களால் அமைந்தது. சுயம்வர காண்டம், கலிதொடர் காண்டம், கலிநீங்கு காண்டம் என மூன்று காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இந் நூலில், 405 வெண்பாக்கள் உள்ளன. இவற்றுள் 13 வெண்பாக்கள், பாயிரம், நூல்வரலாறு என்பனவாகும். சுயம்வர காண்டத்தில் 155 வெண்பாக்களும், கலிதொடர் காண்டத்தில் 147 வெண்பாக்களும், கலிநீங்கு காண்டத்தில் 90 வெண்பாக்களும் உள்ளன. மகாபாரதத்திலே கௌரவர்களுடன் சூதாடித் தோற்ற பாண்டவர்கள் தங்கள் நாட்டை விட்டுக் காட்டிலே வாழ்கின்றனர். அவர்களைப் பிரகதசுவர் என்னும் முனிவர் சென்று காண்கிறார். தமக்கு நிகழ்ந்தவற்றையிட்டுக் கவலையுடன் இருந்த தருமரைத் தேற்றுமுகமாக முனிவர் அவருக்குக் கூறியதாக இக்கதை அமைந்துள்ளது. புகழேந்திப் புலவர் எழுதிய நளவெண்பாவை சிறுவர்களுக்கு ஏற்றவண்ணம் எளிமையாக்கி வசனநடையில் அகளங்கன் வழங்கியிருக்கிறார். நிடத நாட்டின் மன்னன் நளன். அவனது மனைவியான தமயந்தி நளனை விரும்பி சுயம்வரத்தில் அவனை தேர்ந்தெடுத்து மணந்ததை இந்திரன் மூலம் கேட்டு, தமயந்தியின் சுயம்வரத்தில் கலந்து கொள்ள வந்துகொண்டிருந்த கலிபுருஷன் நளனை பழிவாங்க முடிவு செய்வதும், அதன் பின்னர் நடக்கும் சூதாட்டத்தில் நளன் நாடிழந்து, மனைவி குழந்தைகளைப் பிரிந்து சிரமப்பட்டு, பின்னர் இழந்த அனைத்தையும் திரும்பப்பெறுவதைக் கூறும் கதை இது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13324).