11664 மருதன் அஞ்சலோட்டம்.

க.சோமசுந்தரப் புலவர். கொழும்பு: கொழும்புத்துறையூர் வே.க.ப.நாதன், பொய்கையகம், மக்கலம் வீதி, கோட்டை, 1வது பதிப்பு, 1953. (மதுரை: எக்செல்ஸியர் பவர் பிரஸ்).

(11), 80 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 18×12.5 சமீ.

தினகரன் ஆசிரியர் வே.க.ப.நாதன் எழுதிய சோமசுந்தரப் புலவர் பற்றிய வரலாறு முதல் 44 பக்கங்களிலும் இடம்பெற்றுள்ளது. பிறப்பு, கல்விப் பயிற்சி, செய்யுளியற்றல், ஆசிரியராதல், குருவருட்பேறு, மணவினையும் பெரியோர் நட்பும், தெய்வ வழிபாடும் நூல்களும், புலவர்ப் பட்டமும் உயர்நிலைக் கல்வியும், பொற்கிழி பெறுதல் ஆகிய  ஒன்பது அத்தியாயங்களில் புலவரின் வாழ்க்கை வரலாறு எழுதப்பட்டுள்ளது. 45ஆம் பக்கம் முதல் 80ம் பக்கம் வரை சோமசுந்தரப் புலவர் எழுதிய மருதன் அஞ்சலோட்டம் என்ற செய்யுள் நடையிலமைந்த உரை இடம்பெற்றுள்ளது. இன்றுபோல அந்நாட்களிலும்  போட்டிக்காகவும், பட்டத்திற்காகவும் மருதன் (மரதன்) ஓட்டப் போட்டியாளர்கள் போல ஓடியோடிக் கவிதை புனையும் கவிஞர்களையும் பாவலர்களையும் எள்ளிநகையாடும் கவிஞர், பட்டமும் அங்கீகாரமும் நல்ல புலவனைஃபடைப்பாளியை நாடி வரவேண்டுமேயன்றி  தன்நம்பிக்கைகொண்ட ஒரு புலவன் பட்டங்களுக்கும் பரிசுகளுக்கும் பின்னால் ஓடக்கூடாது என்று வலியுறுத்துகின்றார். இந்நூலின் மேலட்டையில் ‘மருதன் அஞ்சலோட்டமும் புலவர் வரலாறும்’ என்று அச்சிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2397).

ஏனைய பதிவுகள்