11841 பார்த்தீனியம்: நாவல்.

தமிழ்நதி (இயற்பெயர்: கலைவாணி இராஜகுமாரன்). சென்னை 600005: நற்றிணை பதிப்பகம், எண் 6/84, மல்லன் பொன்னப்பன் தெரு, திருவல்லிக்கேணி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2016. (சென்னை 600005: சாயி தென்றல் அச்சகம்).

512 பக்கம், விலை: இந்திய ரூபா 490., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-82648-35-2.

திருக்கோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் தமிழ்நதி. ஈழத்துப் போரினால் கனடாவுக்குப் புலம்பெயர்ந்தவர். கனடாவில் வாழ்ந்த காலத்தில் கலைவாணி இராஜகுமாரன் என்ற பெயரில் சிறுகதை, கவிதை, நாடகம், கட்டுரை எனப் பல்வேறு ஆக்க இலக்கிய வடிவங்களையும் பயன்படுத்தித் தனது  படைப்புகளை வெளியிட்டவர். தற்காலிகமாக சென்னையில் வாழ்ந்து வரும் வேளையில் தமிழ்நதியின் சூரியன் தனித்தலையும் பகல் (கவிதைகள்), நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது (சிறுகதைகள்), ஆகிய இரு நூல்கள் வெளிவந்துள்ளன. கானல்வரி – ஆசிரியரின் முதலாவது குறுநாவல். பார்த்தீனியம் இவரது இரண்டாவது நாவல். இந்நாவலானது ஈழப்போராட்டத்தில், பெருமளவு இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் இணைந்துகொள்ளத் தொடங்கிய 80களின் தொடக்கப்பகுதியில் இருந்து ஆரம்பித்து இந்திய இராணுவம் ஈழத்தை விட்டு வெளியேறிய காலப்பகுதியை ஒட்டியதாக நிறைவுறுகின்றது. வானதி-வசந்தன் / பரணியை பிரதான கதாபாத்திரங்களாகக் கொண்டு நகரும் இந்நாவல், 3 பிரதான தளங்களில் நகர்கின்றது. முதலாவது, வானதிக்கும் வசந்திக்கும் இடையிலான காதல் முகிழ்வதில் இருந்து வசந்தன் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து பரணியாக இந்தியாவில் ஆயுதப் பயிற்சி பெறுகின்ற காலப்பகுதிவரையில் பயணிக்கின்றது. இரண்டாவது, பரணி இலங்கை திரும்பி அரசியல் வேலைகளிலும் இயக்கப் பணிகளிலும் ஈடுபடுவது. மூன்றாவது, ஈழவிடுதலை இயக்கம் பற்றிய பற்றுறுதியும் கனவுகளும் கொண்டவனாக வசந்தன் இருந்த காலப்பகுதி. இந்திய இராணுவ வருகையும் அதனூடாக மக்கள் எதிர்கொள்ளும் வதைகளும் இயக்கங்கள் பற்றிய கனவுகளின் வீழ்ச்சியுமாக இக்காலப்பகுதி நகர்கின்றது. ஆயினும் இந்நாவலின் பிரதான பேசுபொருளாக ஈழத்தில் இந்திய இராணுவத்தின் காலப்பகுதியில் செய்யப்பட்ட கடுமையான சித்திரவதைகள், குற்றச் செயல்கள், பாலியல்ரீதியான குற்றங்கள், வன்புணர்வுகள், கொலைகள் என்பவற்றை எடுத்துரைப்பதாகவும் பதிவுசெய்வதாகவும் அமைகின்றது. 1983-1990 காலப்பகுதியில் நேர்முகமாகத் தான் கண்டதை, அனுபவித்ததை, உய்த்து உணர்ந்ததை, கேட்டறிந்ததை இங்கே ஒரு நாவலாக எழுதியிருக்கிறார்.

ஏனைய பதிவுகள்