ராஜகவி ஏ.சீ. ராகில். தமிழ்நாடு: அகநாழிகை பதிப்பகம், 26, ஜெயராமன் தெரு, கோகுலபுரம், செங்கல்பட்டு 603001, 1வது பதிப்பு, ஜனவரி 2016. (சென்னை 5: சாயி தென்றல் பிரின்டர்ஸ்).
112 பக்கம், விலை: இந்திய ரூபா 110., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-84921-05-7.
ஈழத்தின் கிழக்கு மாகாணத்தில் நிந்தவூரைப் பிறப்பிடமாகக் கொண்ட நூலாசிரியர் ஏ.சீ. ராகில், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டு தற்பொழுது சீசெல்ஸ் நாட்டில் வசிக்கிறார். இவரது முதலாவது நாவல் இது. இன ஒற்றுமை, நட்பு ஆகியவற்றை அடிநாதமாகக் கொண்ட கதையமைப்பு. இந்த நாவலின் கதாநாயகன் குமார் ஒரு கவிஞர்/ஆசிரியர். தற்செயலாக, கவிதையில் ஈடுபாடுகொண்ட நர்மதாவைச் சந்திக்கிறான். அவளது இலக்கிய ஈடுபாடும் அழகும் அவள்மீது அவனுக்குக் காதலை ஏற்படுத்துகின்றன. குமாரின் உறவுப் பெண்ணான பூரணி அவனை மிகவும் விரும்பிய போதும் நர்மதா மீது கொண்ட நேயத்தினால் அவளது விருப்பத்தை அவனால் ஏற்க முடியவில்லை. ஆனால் நர்மதா வேறு ஒருவனை மணம்முடிக்க வேண்டிய சூழ்நிலை குமாருக்குத் தெரிய வரவே, ஏற்கெனவே மாப்பிள்ளை பார்த்துவிட்டமையால் அவளை மணக்க விரும்பிய தனது பிந்திய முடிவை அவனால் நிறைவேற்ற முடியாமல் வருந்த நேரிட்டது. பலத்த விரக்தி நிலைக்குள்ளாகிய குமார், பின்னர் தெளிவடைந்து இலக்கிய முயற்சிகளில் ஈடுபடுகின்றான். இறுதியில் பூரணியை மணக்கும் அவனது விருப்பமும் நிறைவேறுகின்றது. இந்நாவலில் குமார், நர்மதா பூரணி இக்பால் அவர் மனைவி நபீசா, குமாரின் தாய், பூரணியின் தாய் ஆகிய கற்பனைப் பாத்திரங்களுடன் கலாநிதி துரை மனோகரன் என்னும் உண்மைப் பாத்திரமும் வருகின்றது. (பேராசிரியர் துரை மனோகரன், பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவராக பணியாற்றியவர்). (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61491).