அரியாலையூர் மிஷாந்தி செல்வராஜா. யாழ்ப்பாணம்: நாவலர் கலாசார மண்டபம், 1வது பதிப்பு, மே 2015. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், முத்திரைச் சந்தி, நல்லூர்).
(14), 51 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ.
வடமாகாண விவசாய அமைச்சில் அபிவிருத்தி உத்தியோகத்தராகப் பணியாற்றும் அரியாலையூர் மிஷாந்தி செல்வராஜாவின் முதலாவது நாவல் படைப்பு இது. விரிவான நாவலாக உருப்பெறக்கூடிய ஒரு களம் இங்கு குறுநாவலாகக் குறுகிநிற்கின்றது. யுத்த அனர்த்தம் தோற்றுவித்த வாழ்வின் அவலநிலையில் அடிபட்டுப்போன சமூகத்தின் பதச்சோறாக வள்ளியம்மை என்ற பாத்திரம் சித்திரிக்கப்படுகின்றது. வள்ளியம்மையின் மகளான வித்தியா பல ஏக்கங்களையும் எதிர்பார்;ப்புகளையும் மனதில் சுமந்துகொண்டு கல்வியே கருந்தனமென வாழ்பவள். கதையின் போக்கில் பல சுவாரஸ்யமான திடீர் திருப்பங்களின் பின், முன்னர் காணாமற்போயிருந்த வித்தியாவின் தந்தையும், அண்ணனும் எதிர்பாராதவிதமாக இவர்களுடன் இணைகின்றனர். பந்த பாசங்களில் திளைத்து வித்தியாவின் குடும்பத்தினர் மகிழ்வதாக கதை முடிகின்றது. காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவகள் இப்படியான திடீர் திருப்பங்களின் மூலமாவது மீளக் கிடைக்கமாட்டார்களா என்று ஏங்கும் தாயக உறவுகளின் எதிர்பார்ப்பே இங்கு இக்குறுநாவலை இயக்குகின்றது.