எஸ்.ஜீ.புஞ்சிஹேவா (சிங்கள மூலம்), எஸ்.சிவகுருநாதன் (தமிழாக்கம்). கொழும்பு 7: மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம், 24/2, 28ஆவது ஒழுங்கை, ப்ளவர் வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2011. (கொழும்பு: குளோப் பிரின்டிங் வேர்க்ஸ்).
75 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×13.5 சமீ., ISBN: 978-955-1655-82-2.
யுத்தம் முடிவடைந்து விட்டது. ஆனால் யுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள் நிறுத்தப்படவில்லை என்பதை சிங்களப் புத்திஜீவியான நூலாசிரியர் இந்நூலின் வழியாகப் பதிவுசெய்கின்றார். மேலும், தமிழ் மொழிக்குரிய கௌரவத்தை வழங்காத எமது பழக்கதோஷம் காரணமாகவே நாம் 30 ஆண்டுக்கால துன்பியல் போரை எதிர்கொண்டோம் என்று குறிப்பிடுகிறார். மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் சிங்கள மூல நூலின் தமிழாக்கம் இதுவாகும். மொழி, அதன் பண்பு, மனிதத் தன்மை அதற்கான உரிமைகள் என சுவாரஸ்யமாக மனதைத் தொடும் வண்ணம் நூலை ஆரம்பிக்கிறார். மொழி தொடர்பான சட்டங்கள், சுற்றறிக்கைகள், பற்றி இந்நூல் விபரமாகத் தெரிவிக்கிறது. சட்டம் எவ்வாறாக இருந்தபோதிலும் என்றும் அது இலங்கையில் சரியாக அமுல் செய்யப்படவில்லை என்று சாடும் ஆசிரியர் மனித உரிமைப் பிரகடனமும் மொழியும் என்ற இறுதி அத்தியாயத்தில் இனம், தொழில், மதம் சார்ந்த சிறுபான்மையினரின் உரிமைகள் பற்றிய ஐ.நா.சாசனம் பற்றியும், அதில் இலங்கை கையெழுத்திட்டது பற்றியும் குறிப்பிடுகிறார். யுத்தம் முடிவுக்கு வந்தாலும் எவரும் வெற்றிபெறவில்லை என்று கூறும் ஆசிரியர், மொழியை அடிப்படையாகக் கொண்டே நாம் வெற்றியை அடையவேண்டும் என்கிறார். தொடர்ந்தும் மொழிரீதியான பாகுபாடு காட்டப்பட்டால், அது மேலும் வெடிமருந்துகளைச் சேகரிக்கவே தூண்டும் என்று எச்சரிக்கிறார். மொழியும் மனிதநேயமும், ஆங்கிலேயரின் ஆட்சி, நடைமுறைப்படுத்தாமல் இருக்கும் பழக்கமும் அதன் வரலாறும், டொனமூர் அறிக்கை கண்ட அநீதியான கவனிப்பு, கண்டி உடன்படிக்கை 1815 மார்ச் 2, அடிப்படை உரிமைகள், அரசகரும மொழிகள், நீதிமன்றங்களின் மொழிகள், அரசகரும மொழியின் அமுலாக்கம், அரசகரும மொழிகள் கொள்கையை அமுலாக்குவதற்கு வெளியிடப்பட்டுள்ள சில சுற்றறிக்கைகள், அரசகரும மொழிகள் கொள்கையை செயற்படுத்துவதற்கான அமைச்சு, நீதவான் நீதிமன்றமொன்றிலிருந்து நிவாரணத்தைக் கோரல், மனித உரிமைப் பிரகடனமும் மொழியும் ஆகிய 13 இயல்களில் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 50427).