ஆரையம்பதி க.சபாரெத்தினம். மட்டக்களப்பு: க.சபாரெத்தினம், செல்வா நகர், ஆரையம்பதி 2, 1வது பதிப்பு, பெப்ரவரி 2014. (மட்டக்களப்பு: ஆதவன் அச்சகம், அரசடி).
xvi, 324 பக்கம், விலை: ரூபா 1000., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-53426-2-9.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு நகரின் தெற்கே 4 மைல் தொலைவில் அமைந்துள்ள ஓர் ஊரே ஆரையம்பதியாகும். இது கிழக்கிலங்கையில் தமிழர் செறிந்துவாழும் ஊர்களில் ஒன்றாகும். இதன் எல்லைகளாக வடக்கில் காத்தான்குடியும் கிழக்கில் வங்காள விரிகுடாக் கடலும் தெற்கில் ஜந்தாம்கட்டை – மண்முனையும் தென்கிழக்கில் பாலமுனையும் தென் மேற்கில் மாவிலங்கைத் துறை – காங்கேயனோடையும் மேற்கில் மட்டக்களப்பு வாவியும் அமைந்துள்ளன. இவற்றுக்கிடையில் மணற்பாங்கான தாழ்ந்த சமவெளியாக ஆரையம்பதி அமைந்துள்ளது. குருகுலத்தோர் தெரு, வேளாளர் தெரு, சாண்டார் (பணிக்கர்) தெரு, செங்குந்தர் தெரு, வண்ணார் தெரு, பறையர் (சாம்பான்) தெரு, பொற்கொல்லர் தெரு, ஆகிய குலப் பெயர்கள் கொண்டழைக்கப்படும் தெருக்கள் இங்கு இருக்கின்றன. அத்துடன் அலையன் குளம், ஆனைக் குளம், வண்ணான் குளம், வம்மிக் கேணி, தோணா பால் வாத்த ஓடை ஆகியன இவ்வூருக்கு நீர்வளம் சேர்க்கின்றன. அக்காலத்தில் வீடுகளில் கொட்டுக் கிணறுகள் இருந்தன. தேத்தா மரத்தின் நடுப் பகுதியைத் தோண்டியெடுத்த பின்னர் குழல்போன்ற மரக்கொட்டினை நிலத்தில் பதிப்பார்கள் கிணற்றைப் பாதுகாக்கும் கட்டுமானம் இந்தக் ‘கொட்டுக்குத்தான்’ இருக்கும். இத்தகைய சிறப்புப் பெற்ற ஆரையம்பதியின் பூர்வீக வரலாறு பற்றிய நூலாக இது வெளிவந்துள்ளது. பூர்வீகமும் தோற்றுவாயும், மக்கள் வாழ்வியல், மண்வாசனை மொழிவழக்கு, அரச,பொது, சமூகத் தாபனங்கள், கோயில்களும் அவற்றின் தொன்மை வரலாறுகளும், குறிப்பிடத்தக்க பெரியார்களும் மாண்புடை மக்களும், பாரம்பரிய கலாசாரமும் விழுமியங்களும், கலைகளும் விளையாட்டுக்களும், கைத்தொழில் முயற்சிகள், அயல் கிராமங்களுடனான உறவுநிலை ஆகிய பத்து அத்தியாயங்களில் இந்தப் பிரதேச வரலாற்று நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 236734).