12078 – சுழிபுரம் பறாளை விநாயகர், மூளாய் விநாயகர், பொன்னாலை விஷ்ணு ஆலய வரலாறுகள்.

குணரத்தினம் செல்லத்துரை. யாழ்ப்பாணம்: கு.செல்லத்துரை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1989. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(9), 19 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

சுழிபுரம் பறாளை விநாயகர், மூளாய் விநாயகர், பொன்னாலை விஷ்ணு ஆலயம் ஆகியவற்றின் வரலாறுகளினூடாக, அவற்றை நிறுவியதாகக் கருதப்படும் சித்திராயன் பரம்பரை பற்றி இந்நூலில் ஆசிரியர் ஒரு வரலாற்றுப் பதிவினை மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்தின் வடமேற்கே தொல்புரம், சுழிபுரம் (சோழியபுரம்) என்னுமிரு கிராமங்கள் உள்ளன. சுழிபுரம் கிராமத்தின் வயல் சூழ்ந்த மருத நிலப்பகுதியில் கிழக்கு நோக்கிய சந்நிதியாக இலங்கையின் புராதன விநாயகர் ஆலயங்களில் ஒன்றான ‘பறாளை விநாயகர் ஆலயம்’ அமைந்துள்ளது. சுளிபுரத்திலிருந்து மூளாய் செல்லும் பிரதான வீதியில் உள்ள வளைவில் அமைந்துள்ளது மூளாய் விநாயகர் கோவில் என வழங்கும் ‘மூளாய் வதிரன்புலோ சித்தி விநாயகர் ஆலயம்’. அழகிய இவ்வாலயத்துடன் தீர்த்தக் கேணியொன்றும் அமைந்துள்ளது. பொன்னாலை, யாழ்ப்பாணக் கடலேரிக் கரையில் காரைநகரை நோக்கியபடி அமைந்துள்ளது. இங்கு குடிகொண்ட விஷ்ணுவின் ஆலயமே ‘பொன்னாலை விஷ்ணு ஆலயம்’. சுழிபுரம், மூளாய், வட்டுக்கோட்டை என்னும் ஊர்கள் பொன்னாலையைச் சுற்றியே அமைந்துள்ளன. பொன்னாலை, யாழ்ப்பாணம் – மானிப்பாய்-காரைநகர் வீதி, யாழ்ப்பாணம்-பொன்னாலைபருத்தித்துறை வீதி, வட்டுக்கோட்டை-மூளாய் வீதி என்பவற்றால் வரையறுக்கப்படும் பகுதிக்குள் ஏறத்தாழ அடங்குகிறது. பொன்னாலை விஷ்ணு ஆலயத்தில் கல்லுருவமாக அமைந்த ஆமையை ஆலயக் கருவறையில் காணலாம். அந்த கூர்மாவதார மூர்த்திக்கே ஆலயத்தின் முதற்பூஜை இன்றும் நடக்கிறது. ஆமை வடிவில் பெருமாள் தோன்றிய சமுத்திரம் திருவடிநிலை என்று இன்றும் போற்றப்படுகிறது. இவ்வாலய தீர்த்த விழா வருடாந்தம் இச்சமுத்திரக் கரையிலேயே நடைபெறுகிறது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 13509).

ஏனைய பதிவுகள்