12157 – நக்கீர தேவநாயனார் அருளிச்செய்த திருமுருகாற்றுப்படை.

நக்கீரதேவ நாயனார் (மூலம்), ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் கூட்டுறவுத் தமிழ்நூல் பதிப்பு விற்பனைக் கழகம், 411/1, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1971. (யாழ்ப்பாணம்: கூட்டுறவு அச்சகம்).

(6), 72 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 17.5×12 சமீ.

பத்துப்பாட்டு நூல்களுள் முதலில் வைத்து எண்ணப்படுவது திருமுருகாற்றுப்படை. பன்னிரு திருமுறை பகுப்பில் இது பதினோராவது திருமுறையில் சேர்க்கப் பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த நக்கீரதேவநாயனாரால் இது இயற்றப் பட்டது. இது கடைச்சங்க நூல்களில் ஒன்று என்பது மரபுவழிச்செய்தியாகும். இது பிற்காலத்தில் எழுந்த நூல் என்று கருதுவோருமுள்ளனர். முருகப் பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட இந்நூல் 317 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவால் ஆக்கப்பட்டுள்ளது. ‘ஆற்றுப்படுத்தல்’ என்னும் சொல் வழிப்படுத்தல் என்னும் பொருள்படும். ‘முருகாற்றுப்படை’ எனும்போது, வீடுபேறு பெறுவதற்குப் பக்குவமடைந்த ஒருவனை அப்பேறைப் பெற்ற ஒருவன் வழிப்படுத்துவது எனப் பொருள்படும் என்பது நச்சினார்க்கினியர் கூற்று. திருமுருகாற்றுப்படை ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் முருகப் பெருமானின் அறுபடைவீடுகள் ஒவ்வொன்றையும் பாராட்டுவனவாக அமைந்துள்ளது. இவற்றுள் முதற்பகுதியில் திருப்பரங்குன்றமும், இரண்டாம் பகுதியில் திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயும், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் பகுதிகளில் முறையே திரு ஆவினன்குடி(இந்நாளில் பழநி என்று வழங்கப்படுவது), திருவேரகம் (சுவாமிமலை), குன்றுதோறாடல், பழமுதிர் சோலை ஆகிய படைவீடுகளும் பேசப்படுகின்றன. இந் நூலை முதன்முதலில் 1834இல் சரவணப்பெருமாளையர் பக்திப் பாசுரமாகப் பதிப்பித்தார். 1851இல் ஆறுமுக நாவலரும் பதிப்பாகக் கொண்டு வந்தார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24039).

ஏனைய பதிவுகள்