சபா ரவீந்திரன். நயினாதீவு: அமரர் சின்னப்பு வேன்முருகோன்பிள்ளை அவர்களின் ஞாபகார்த்த வெளியீடு, 1வது பதிப்பு, மே 2009. (அச்சக விபரம் தரப்படவில்லை).
68 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.
நயினை அமரர் சின்னப்பு வேன்முருகோன்பிள்ளை (10.09.1939-16.04.2009) அவர்களின் மறைவையொட்டி வெளியிடப்பட்ட நினைவு மலர். 2001இல் சபா ரவீந்திரன் அவர்கள் தொகுத்து வெளியிட்டிருந்த ‘தேசவழமை’ என்ற தலைப்பிலான நூலினை இந்நினைவுமலரில் மீளவும் இடம்பெறச் செய்துள்ளனர். டச்சுக்காரர் இலங்கையை ஆட்சிசெய்தவேளை 1704ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத் தமிழர்களிடையே வழக்கிலிருந்த எழுதாச் சட்டங்களைத் தொகுக்கும்படி டச்சுக் கவர்னர் சைமன்ஸ் அவர்கள் உத்தரவிட்டிருந்தார். அவ்வாறு தொகுக்கப்பட்ட ஆவணம் பின்னாளில் தமிழாக்கம் செய்யப்பெற்று 1806ஆம் ஆண்டு 18ஆம் இலக்க ஒழுங்குவிதியில் குறிப்பிடப்பட்டது. 1814இல் பிரதம நீதியரசராகவிருந்த சேர் அலெக்சாண்டர் ஜோன்சன் தேசவழமையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அக்காலத்திலிருந்தே தேசவழமைச் சட்டம் சட்ட நூலில் இடம்பெற்றுவருகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 202672).