ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை. யாழ்ப்பாணம்: ஆ.முத்துத்தம்பிப் பிள்ளை, 39ஆவது பதிப்பு, 1962. (யாழ்ப்பாணம்: நாவலர் அச்சுக்கூடம்).
44 பக்கம், ஓவியங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.
இலங்கைப் பாடசாலைகளில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகட்டத்திலிருந்து பயன்படுத்தப்பட்டுவந்த பிரபல்யமான தமிழ்மொழிப்பாட நூல்களுள் இதுவும் ஒன்றாகும். யாழ்ப்பாண மாவட்டத்தின், மானிப்பாயில் ஆறுமுகம்பிள்ளை- சீதேவிப்பிள்ளை தம்பதியினருக்கு மூத்த புதல்வராக 18.04.1858 இல் பிறந்தவர் ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை அவர்கள். தனது இளைமைக்கால கல்வியை மானிப்பாயிலேயே பெற்றுக்கொண்ட இவர், பின்னர் பேர்சிவல் பாதிரியாரால் நிறுவப்பட்ட (தற்போது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி) உவெஸ்லியன் மத்திய பாடசாலையில் இணைந்து கற்றார். 1876இல் நாவலப்பிட்டியில் ஆசிரியப் பணியாற்றினார். 1880ம் வருடம் ஆசிரியத் தொழிலைவிட்டு நீங்கி தமிழகம் சென்றார். ‘சத்தியாபிமானி’ என்னும் வாரப் பத்திரிகைக்கு ஆசிரியராக சிலகாலம் பணியாற்றினார். சென்னையிலே ஜுபிலி அச்சகம் (துரடிடைநந Pசநளள) என்ற அச்சகத்தை 1885ம் ஆண்டு நிறுவித் தமிழ்த்தொண்டு புரிந்து வந்தார். 1893இல் யாழ்ப்பாணம் மீண்ட இவர், வண்ணார்பண்ணையிலே ஆறுமுக நாவலர் வாழ்ந்த இல்லத்தினை விலைக்கு வாங்கி, அவ்வில்லத்திற்கு ‘நாவலர் கோட்டம்’ எனச் சிறப்புப் பெயரிட்டு அதனருகிலேயே ஒரு புத்தகசாலையினையும், ‘நாவலர் அச்சகம்’ என்ற அச்சகத்தையும் நிறுவி, தமிழ்த்தொண்டும் சைவத்தொண்டும் புரிந்துகொண்டிருந்தார்கள். புதிய இலகுபோதம் பாடநூலை மாத்திரமல்லாது, இலங்கைச் சரித்திர சூசனம் (1886), காளிதாச சரித்திரம் (1886), அபிதான கோசம் (1902), பாரதச் சுருக்கம் (1903), நன்னூல் இலகுபோதம் (1904), ஆங்கில-ஆங்கில-தமிழ் அகராதி (1907), சிவிலியன் தமிழ் இலக்கணம் (1911), யாழ்ப்பாணச் சரித்திரம் (1912), நன்னூல் உதாரண விளக்கம், தென்மொழி வரலாறு (1920) எனும் நூற்களை பிள்ளையவர்கள் எழுதி வெளியிட்டிருக்கின்றார்கள். அபிதான கோசம் என்னும் பெயரில் தமிழ் மொழியில் முதன்முதலாக கலைக்களஞ்சியம் ஒன்றினை இயற்றிய பெருமை இவரையே சாரும். இக்கலைக்களஞ்சியம் முடிவுபெற 16 ஆண்டுகள் சென்றதாக அதன் முகவுரை கூறும். சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர் அவர்கள் எழுதிய வினைப்பகுதி விளக்கம், சேர். பொன். இராமநாதன் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்த பகவத் கீதை, குமாரசுவாமி ஸ்ரீகாந்தா அவர்கள் எழுதிய The Ethical Epigrams of Auvaiyar ஆகிய நூல்களையும் பிள்ளையவர்கள் பதிப்பித்து வெளியிட்டுள்ளார். தமிழ் மொழிக்கும், தமிழ் கலைகளுக்கும், சைவ சமயத்துக்கும், நாட்டுக்கும் பெருந்தொண்டாற்றி வந்த முத்துத்தம்பிப்பிள்ளையவர்கள் 1917ம் வருடம் நவம்பர் மாதம் 3ம் திகதியன்று மறைந்தார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 12941).