14646 மனித விழுமியப் பாடல்கள்.

கல்வயல் வே.குமாரசாமி. சாவகச்சேரி: கல்வயல் வெ.குமாரசாமி நினைவு மலர், 1வது பதிப்பு, ஜனவரி 2017. (சாவகச்சேரி: திருக்கணித பதிப்பகம்). 28 பக்கம், புகைப்படம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×12.5 சமீ. 2016இல் இல் இறைபதமடைந்த கல்வயல் வே.குமாரசாமி (01.01.1944-10.12.2016) அவர்களின் பெயரால் வெளியிடப்பெற்ற நினைவு மலர். கல்வயல்-சாவகச்சேரியில் பிறந்த கவிஞரான இவர் கலைமாணி, முதுகலைமாணிப் பட்டங்களைப் பெற்றவர். கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மும்மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்ற இவர், முருகையன், கைலாசபதி, மகாகவி போன்றேரிடம் கவிதைத்துறையில் பயின்று அதன் வாயிலாக சமூக அவலங்களைக் கூறும் உணர்ச்சிமிக்க பல கவிதைகளை எழுதியிருந்தவர். முறுகல் சொற்பதம், சிரமம் குறைகிறது, மரண நனவுகள் ஆகிய கவிதைத் தொகுப்புகளுடன் பல குழந்தைப்பாடல் நூல்களையும் எமக்கு வழங்கியுள்ளார். இவருக்கு 2000ஆம் ஆண்டில் இந்து சமயப் பேரவையினர் “கவிமாமணி” விருதினையும், 2009இல் கலாசார அலுவல்கள் திணைக்களம் கலாபூஷணம் விருதினையும், 2011இல் அகில இலங்கை கம்பன் கழகம் மகரந்தச் சிறகு விருதினையும், கொழும்புத் தமிழ்ச் சங்கம் உலகத் தமிழ் இலக்கிய மாநாடு விருதினையும், 2014இல் தென்மராட்சி பிரதேச செயலகம் கலைச்சாகரம் விருதினையும் வழங்கியிருந்தனர். இவரது 45 ஆண்டுகளுக்கும் மேலான கலைச்சேவையை பாராட்டி 2015இல் கௌரவ முதலமைச்சர் விருதினையும் வழங்கியிருந்தனர். 2016இல் தேசத்தின் உயர் கௌரவ விருதான காவ்யாபிமானி விருதினையும் பெற்றிருந்தவர் இவர். இந்நூலில் வாழும் வழி, அம்மா அப்பா, நற்செல்வம், கடமை, வேண்டுதல், ஆவல், அன்பு, நடத்தைகள், உயர்வின் வழி என இன்னோரன்ன தேர்ந்த கவிதைகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்