14700 தாயக பூமி.

கா.தவபாலன் (இயற்பெயர்: கா.தவபாலச்சந்திரன்). அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, வைகாசி 2017. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 104 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-43867-1-6. முள்ளியவளை- கணுக்கேணி கிழக்கைச் சேர்ந்த இந்நூலாசிரியர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறையில் பீ. ஏ. பட்டம் பெற்றவர். 2000களில் கண்டியில் அரச உத்தியோகத்தராக-வரிமதிப்பாளராகப் பணியாற்றிய வேளை ஞானம் மாத இதழின் மூலம் இலக்கியத்துறையிலும் ஈடுபாடு கொண்டிருந்தவர். 2015இல் இலக்கியத்துக்கான கலாபூஷணம் விருதினை பெற்றுக்கொண்டவர். இச்சிறுகதைத் தொகுப்பில் திருமணப்பேச்சுக்களின்போது செய்யப்படும் தில்லுமுல்லுகள், மதுவினால் குடும்பத்தில் கணவன்- மனைவிக்கிடையே ஏற்படும் மோதல்கள், கலப்புத் திருமணம்/ கலப்புக் குடியேற்றம் என்பவற்றால் அழிந்துவரும் தமிழரின் இன அடையாளங்கள், மண்ணாசை ஏற்படுத்தும் காணித் தகராறுகள் எனப் பல்வேறு சமூகப் பிரச்சினைகளை வெளிப்படுத்துகின்றார். இத்தொகுப்பில் தண்ணிமுறிப்புக் குளம், திருமணப் பேச்சு, மெல்லத்திறந்தது கனவு, தேமாவடி, குடிக்காதேங்கோ, சின்ன வயசு ஆசைகள், கலப்புத் திருமணம், காதல் திருமணம், டொனேஷன், தனிக்குடித்தனம், குடி குடியைக் கெடுக்கும், இரவல் சங்கிலி, அகதியாய் ஓடமாட்டேன், சூனியப் பிரதேசம், நிலவே நீ சாட்சி, மீள்குடியேற்றம், சம்பளக் காசு, கொண்டுவந்த சீதனம், பட்டம், தாய்மண், இப்படியும் மனிதர்கள், காரில் வந்த காரிகை, உண்மைக் காதல், காணவில்லை, தாயகபூமி ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 25 கதைகள் இடம்பெற்றுள்ளன. இந்நூல் ஜீவநதி வெளியீட்டகத்தின் 77ஆவது பிரசுரமாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்