14740 ஆனந்தியின் இரு குறுநாவல்கள் (புது வீடு, குருஷேத்திரம்).

ஆனந்தி (இயற்பெயர்: மாதினியார் ஆனந்தநடராஜா). அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, வைகாசி 2017. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). viii, 80 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 17.5×12.5 சமீ., ISBN: 978-955- 4676-63-3. நிறைவான அன்பின் மூலம் பெறப்படுவதே கடவுள் தரிசனமாகத் தோன்றுகின்ற அருள்நிலை என்ற கருத்தினை இந்நூலிலுள்ள இரண்டு குறுநாவல்களும் போதிக்கின்றன. “புது வீடு” என்ற குறுநாவல், தடம்மாறிப் போய்க்கொண்டிருக்கும் விபரீதமான வாழ்வியல் மாற்றங்களை எதிர்கொள்ள நேர்ந்த மனவருத்தத்துடன் நீண்ட காலத்துக்கு முன் 1986ஆம் ஆண்டில் இந்நாவல் எழுதப்பட்டது. கிராமத்துப் பாமரத்தனமான தெய்வீகக் களையுடன் நின்று நிலைத்த ஒரு பெண்ணையே மையமாக வைத்து, சிறுவயதில் அவளோடு கொண்ட களங்கமற்ற அன்பின் நிமித்தம் வந்து உறவாடி உயிர் கலந்த ஒரு சிறுவன், சூழ்நிலை சாபத்துக்காளாகி மனம் திரிந்துபோய் மண்ணில் ஒரு மறைபொருளாகி, நீண்டகாலமாக வெளிநாட்டில் அஞ்ஞாதவாசம் செய்துவிட்டு, மீண்டும் அவள் வாழ்கின்ற அந்த மண்ணுக்கே திரும்பிவந்து அவளது புனிதமான பார்வை படுவதன் மூலம் முற்றிலும் மனம்திருந்தி உயிர்த்தெழும் ஒரு புதிய மனிதனாக மீண்டுவருவதை உணர்ச்சிபூர்வமாகச் சொல்கின்றது. இரண்டாவது கதை “குருஷேத்திரம்” கல்யாணமென்ற கனவுகளோடு காத்திருக்கும் பெண்களுக்கு ஒரு புரட்சிகரமான வாழ்வியல் மாற்றத்தை வலியுறுத்தும் ஒரு செய்தியாக அமைகின்றது. கற்பு என்னும் சமூக மரபுகளைக் கட்டிக்காக்க விரும்பும் சாஸ்திர விதிக்குட்பட்டு தீக்குளித்தே செத்து மடியும் அபலைப் பெண்களின் கண்களில் வழிந்தோடும் கண்ணீர் நதியில் குளித்து எழும் சோகம் மாறாமலே அதற்குப் பரிகாரம் தேடமுனையும் ஆத்மதிருப்தி இக்குறுநாவலில் பிரதிபலிக்கின்றது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 063294).

ஏனைய பதிவுகள்