14746 உள்ளத்தனைய உயர்வு (நாவல்).

ஆ.மு.சி.வேலழகன் (இயற்பெயர்: சி.வேல்முருகு). மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல.64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2012. (தெகிவளை: ஏ.ஜே. பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 191 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-8715-76-5. 1972 முதல் இலக்கியத்துறையில் எழுதி வருபவரும், கிழக்கிலங்கையின் மூத்த படைப்பாளியுமான கவிஞர் ஆ.மு.சி.வேலழகன் எழுதிய 18ஆவது நூலாக இந்நாவல் வெளிவந்துள்ளது. சாதி, இனம், குலம், மதம் முதலிய பேதங்களற்ற சமூகத்தினைக் காண்பதையே தவமாகக் கொண்ட வேலழகன் அவர்களின் ஆக்கங்கள் அனைத்திலும் அத்தவத்தின் ஆழமான தடங்களை காணமுடிகின்றது. கிழக்கிலங்கையின் கிராமியச் சூழலையும் அங்கு வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கையையும் காட்சிப்படுத்தும் போக்கு இந்நாவலில் காணப்படுகின்றது. இக்கதையின் நாயகன் கந்தன் என்னும் கந்தவனம், தன் தந்தையின் பால் பற்றும் மதிப்பும் கொண்டவன். தந்தையின் இழப்பு அவனை நிலைகுலைய வைக்கின்றது. சகலதையும் இழந்த உணர்வில் வாழ்வில் தான் தனித்து விடப்பட்டதாக உணர்கிறான். அவனது நிலைகண்டு கலங்கும் நண்பன் ஞானன் ஆன்மீகமே அவனை இயல்பு வாழ்க்கைக்கு மீளக்கொண்டுவரும் என்று நம்புகின்றான். தமது ஊரிலிருந்து கதிர்காமம் பாதயாத்திரைக்குச் செல்லும் யாத்திரீகர் குழுவில் கந்தனையும் இணைத்துவிடுகின்றான். பற்றற்ற ஞானியாகப் பாதயாத்திரை செல்லும் கந்தனின் பாதயாத்திரையில் இணையும் பிரெஞ்சுப் பெண்ணான மீனாட்சி, வாழ்க்கையின் வேறுபட்ட அனுபவங்களையும் வாழ்க்கை முறையினையும் அவனுக்குத் தெரியவைக்கிறாள். கதிர்காமத்தில் அப்பெண்ணுக்கு நேரும் ஒரு விபத்தின் காரணமாக மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகிறாள். கந்தவனம் அவளுக்கு உதவுகின்றான். தன் தாயின் அனுமதியுடன் தன் வீட்டில் அவளைத் தங்க வைக்கின்றான். காலக்கிரமத்தில் இருவரும் காதல்வசப்பட்டு இல்லறவாழ்வில் இணைகின்றனர். இக்கதை யினூடாக ஆசிரியர், தன்னலமற்ற நட்பு, ஆபத்தில் உதவும் மனிதாபிமானம், தன் கலாசாரத்தைப் பேணும் உறுதி, பிற இனங்களின் பண்பாட்டை மதிக்கும் பண்பு ஆகிய விழுமியங்களைப் பதிவுசெய்துள்ளார். பட்டிப்பளை-கதிர்காமம்- மொனராகலை என முக்கோண இணைப்பினூடாக இக்கதையை ஆசிரியர் வடிவமைத்திருக்கிறார். (இந்நூல் மட்டக்களப்பு பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 4562).

ஏனைய பதிவுகள்