14821 ஜெப்னா பேக்கரி.

வாசு முருகவேல். சென்னை 600 042: யாவரும் பப்ளிஷர்ஸ், 214, புவனேஸ்வரி நகர் 3வது மெயின் ரோடு, வேளச்சேரி, 1வது பதிப்பு, டிசம்பர், 2017. (அச்சக விபரம் தரப்படவில்லை). 128 பக்கம், விலை: இந்திய ரூபா 120., அளவு: 21.5×14.5 சமீ. இது ஒரு இலக்கிய புனைவுப் பிரதி. இலங்கையின் வட பகுதியிலிருந்து முஸ்லீம்களைப் புலிகள் வெளியேற்றியது குறித்த உண்மைகளை உள்ளபடியே சித்திரிப்பதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம் என ஆசிரியர் இந்நாவலின் முன்னுரையிலே குறிப்பிட்டுள்ளார். “இலங்கைத் தீவிலிருந்து இந்திய ராணுவம் வெளியேறுவதற்கு முன்பாக ஊர்க்காவல் படை என்ற பெயரில் இஸ்லாமிய இளைஞர்களைக் கொண்டு ஒரு தனிப்படை அமைத்து அவர்களுக்கென அதிகாரம் கொடுத்தது. தமிழர் – இஸ்லாமியர் வெறுப்பின் குழப்பமான சூழல் தீவிரமடைந்தது இங்கிருந்துதான். அதன் பிற்பாடு நடந்த பெரும்பாலான வன்முறைகளுக்கான துவக்கத்தை இந்திய அமைதிப்படை விதைத்துவிட்டுப் போனது. வாசு முருகவேலின் ஜெப்னா பேக்கரியின் கதையும் இதன் பின்புலத்தில் தான் உருவாகியுள்ளது”. லக்ஷ்மி சரவணகுமார் (நாவலுக்கான முன்னுரையில்). இந்நாவலின்படி ஒருநாள் திடீரெனப் புலிகள் யாழ்ப்பாணத்தில் 85 முஸ்லீம் இளைஞர்களையும் அவர்களோடு கூட்டுச் சேர்ந்திருந்த ஒரு தமிழரையும் கைது செய்கிறார்கள். இவர்களால் யாழ்ப்பாணத்து வீடொன்றில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான ஆயுதங்களையும் இவர்களுக்கும் இலங்கை இராணு வத்திற்குமான தொடர்பையும் புலிகள் கண்டுபிடிக்கிறார்கள். இதைத் தொடர்ந்து அனைத்து யாழ்ப்பாண முஸ்லீம்களையும் ஒஸ்மேனியா கல்லூரிக்கு அழைத்த புலிகள் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட ஒட்டுமொத்த முஸ்லீம்களையும் 2 மணிநேர அவகாசத்துள் யாழ்ப்பாணத்திலிருந்து அனைத்து உடமைகளையும் கைவிட்டு வெளியேறுமாறு துப்பாக்கி முனையில் ஆணையிட்டு வெளியேற்றுகிறார்கள். இவ்வாறாக இந்நாவலில் கதை வளர்த்துச் செல்லப்படுகின்றது. ஊர்காவல் படைகளின் உருவாக்கம் பற்றிய மற்றுமொரு வரலாற்றுக் குறிப்பினையும் இங்கு குறிப்பிடவேண்டும். ஊர்காவல் படை என்பது அரச பாதுகாப்புப் பிரிவினால் உருவாக்கப்படும் தற்காலிக துணைப்படை. Shot gun வகைத் துப்பாக்கிகளும் அவற்றுக்கான சிறு எண்ணிக்கையான ரவைகளுமே இவர்களுக்கு வழங்கப்பட்டன. ஆயுதக் குழுக்களால் தாக்கப்பட்ட முஸ்லிம் ஊர்களிலும் எல்லைச் சிங்கள ஊர்களிலும் மக்கள் வேண்டிய பாதுகாப்பை வழங்க போதிய ராணுவம் இல்லாத நிலையில் குறித்த ஊர் பிரஜைகளைக் கொண்டு இவை உருவாக்கப்பட்டன. தாக்கப்படும் ஊரைக் காக்க ராணுவம் வந்து சேரும் வரையான தற்காப்பே ஊர்காவல் படையின் பொறுப்பு. பெரும்பாலும் இப்படைகளில் உள்;ர் சண்டியர்களின் மேலாதிக்கம் இருந்தது, அரச படைகளுக்கேயுரிய மனோபாவங்களுமிருந்தன. முஸ்லிம் மக்கள் மத்தியில் அச்சுறுத்தும் “மூன்றாம் படை”யாக அவர்கள் தேறினர். அரச படையுடன் பொருதிய பலமிக்க ஆயுதக் குழுக்கள் இவர்களை மிக எளிதாக ஊர் ஊராக இரவிரவாக வேட்டையாடின. பதிலுக்கு அப்பாவித் தமிழ் மக்களை ஊர்காவல் படையினர் அவ்வப்போது பழி தீர்த்தனர். கடைசியில் ஊர்காவல் படைகள் கலைக்கப்பட்ட போது எஞ்சியவர்கள் அரச இராணுவத்தில் உள்ளீர்க்கப்பட்டார்கள்.

ஏனைய பதிவுகள்