14860 ஈழத்துத் தமிழ்க் கிறிஸ்தவ இலக்கியம்(போர்த்துக்கேயர் காலம்).

ஹறோசனா ஜெயசீலன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xiii, 126 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659- 644-1. தமிழ்ச் சமூக வரலாற்றில் காலத்திற்குக் காலம் இந்தியப் பண்பாட்டுக்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் வெவ்வேறு சமயங்களின் ஊடாட்டம் நிகழ்ந்து வந்துள்ளது. இவ்வூடாட்டமும் பரவுகையும் தமிழ்ச் சமூக அசைவியக்கத்தில் பெருமாற்றங்களை ஏற்படுத்திவந்துள்ளன. குறிப்பாக, தொடக்க காலத்தில் தமிழ்ச் சமய மரபுகளுடன் இந்தியப் பெரும் பண்பாட்டுக்குள்ளிருந்து வைதீக, அவைதீக மதங்களின் ஊடாட்டமும் இணைவும் ஏற்பட்டன. அதே போல இந்தியப் பண்பாட்டுக்கு வெளியிலிருந்து வந்த, உலகின் இரு பெரும் மதங்களாகிய இஸ்லாமும் கிறிஸ்தவமும் அடுத்தடுத்த கால கட்டங்களில் தமிழ்ச் சூழமைவில் மற்றுமொரு மடைமாற்றத்தைத் திறந்துவிட்டன. இவ்வாறு உள்நுழைந்த சமயங்கள் யாவும் தமது சமயச் சித்தாந்தக் கொள்கைகளுக்கு இணங்க தமிழ்ச் சூழலில் நிலைபெற்றுள்ளதோடு ஒவ்வொரு சமயமும் பூர்வீக தமிழ்ப் பண்பாட்டிலிருந்தும் ஏனைய மதங்களின் பண்பாட்டுக் கூறுகளிலிருந்தும் தேவையானவற்றை ஏற்றுக்கொண்டுள்ளன. அந்தவகையில் கிறிஸ்தவம் தமிழ்ச் சூழலுடன் ஊடாடி உருவாக்கிய தமிழ்க் கிறிஸ்தவப் பண்பாட்டை ஈழத்தின் போர்த்துக்கேயர் காலத்தை அடிப்படையாகக்கொண்டு ஆராய்வதாக இந்நூல் அமைந்துள்ளது. தோற்றுவாய், கிறிஸ்தவமும் தமிழ்ப் பண்பாடும், அர்ச் யாகப்பர் அம்மானை, ஞானப்பள்ளு, போர்த்துக்கேயர் காலக் கிறிஸ்தவ இலக்கியங்களில் பிற சமயக் கண்டனம், நிறைவு ஆகிய ஆறு பிரதான இயல்களில் இவ்வாய்வு விரிகின்றது. பின்னிணைப்புகளாக கிறிஸ்தவமும் அடித்தள மக்களும், கலைச்சொல் விளக்கம் ஆகியன தரப்பட்டுள்ளன. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ச் சிறப்பு இளங்கலைமாணி, முதுகலைமாணி பட்டங்களைப் பெற்ற திருமதி ஹறோசனா ஜெயசீலன் இலங்கை சப்பிரகமுவப் பல்கலைக்கழகத்தின் மொழிகள் துறையில் உதவி விரிவுரையாளராகக் கடமையாற்றி வருகிறார்.

ஏனைய பதிவுகள்