தில்லைநாதன் கோபிநாத், கலாமணி பரணீதரன், நடராசா பிரபாகர் (தொகுப்பாசிரியர்கள்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, தை 2020. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
104 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-33-7.
ஈழத்தின் முதலாவது தமிழ் கவிதைச் சஞ்சிகையான ‘தேன்மொழி” மாத இதழ் “வரதர்” என்ற தி.ச.வரதராசன் அவர்களினால் புரட்டாதி 1955 முதல் சிறிது காலம் வெளியிடப்பட்டது. ஒவ்வொன்றும் 16 பக்கங்கள் கொண்டதாக 6 தேன்மொழி இதழ்கள் வெளிவந்திருந்தன. முதல் நான்கு இதழ்களும் தொடர்ச்சியாக மாதம் தவறாமல் வெளிவந்திருந்தன. ஐந்தாம் இதழ் தை-மாசி மாதங்களை இணைத்து 1956இலும் ஆறாவது இதழ் தட்டுத் தடுமாறி நான்கு மாதங்களுக்குப் பின் ஆனி 1956இலும் வெளிவந்தன. அதுவே தேன்மொழியின் கடைசிக்குரலாக அமைந்துவிட்டது. ஒவ்வொரு இதழின் பின் அட்டையிலும் சிறப்பாக ஓரு கவிஞர் அறிமுகப்படுத்தப்பட்டார். நாவற்குழியூர் நடராசன், சோ.நடராசன், அ.ந.கந்தசாமி, முதலிய ஈழத்துக் கவிஞர்களும், ச.து.சு.யோகி, கலைவாணன், ரகுநாதன் முதலிய தமிழ்நாட்டுக் கவிஞர்களும் இப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டனர். ஈற்றடிகள் கொடுத்துத் தனி வெண்பாப் பாடத்தூண்டும் முயற்சியையும் தேன்மொழி மேற்கொண்டது. மொழிபெயர்ப்புக் கவிதைகளும், பிறமொழித் தழுவல் கவிதைகளும் இதில் வெளிவந்தன.