இரா.துரைரத்தினம். கொழும்பு: தமிழ் தந்தி, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 13: யுனைட்டெட் மேர்ச்சன்ட்ஸ் லிமிட்டெட், 529/19, கே.சிறில் சி.பெரேரா மாவத்தை).
xii, 194 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15சமீ.
1981இல் ஈழநாடு பத்திரிகையின் செய்தியாளராக ஊடகவியல்துறையில் இணைந்துகொண்டவர் இரா.துரைரத்தினம். வடமராட்சி கிழக்கு ஆழியவளையை பிறப்பிடமாகக் கொண்டவர். ஈழநாடு, தினகரன், முரசொலி, விடிவானம், தினக்கதிர், சுவிஸ் நிலவரம் எனத் தனது ஊடகவியல் பணிகளை விரிவாக்கிக் கொண்டவர். மட்டக்களப்பில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து 2004இல் சுவிட்சர்லாந்திற்;குப் புலம்பெயர்ந்து சென்று அங்கு குடும்பத்தினருடன் வாழ்ந்து வருபவர். கடந்த 37 வருடங்களாக தான் சந்தித்த அனுபவங்கள், துன்பங்கள் எழுதாத செய்திகள் எனப் பலவற்றையும் தொகுத்து இந்நூலை ஆக்கியிருக்கிறார். இவர் ஊடகத்துறையில் கால் பதித்தவேளை இலங்கையின் மிக நெருக்கடியானதொரு அரசியல் போராட்ட காலகட்டமாகும். நெருக்கடிமிக்க அக்காலகட்டத்தில் இடம்பெற்ற விறுவிறுப்பான அரசியல் சம்பவங்களை தன்னுடைய கவர்ச்சிமிகு எழுத்துக்களின் வழியாக சுவாரசியமாகப் பதிவுசெய்துள்ளார். விடுதலைப் போராட்ட வரலாற்றில் மறக்கமுடியாத 2004 மார்ச் 3, புலம்பெயர் தமிழர்கள் சிலரின் பிற்போக்குத்தனங்கள், மட்டக்களப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட யாழ். தமிழர்கள், இராசதுரைக்குத் துரோகிப் பட்டம் வழங்கிய கூட்டணி, 2000இல் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஏற்பட்ட பிளவு, தினக்கதிர் மீதான தாக்குதல், கூட்டமைப்பின் உருவாக்கம் பற்றிய மாறுபட்ட செய்தி, முதலாவது பிராந்திய செய்தியாளர் சங்கம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தோற்றம், வெருகலில் சிந்திய இரத்தம், பிளவுகளை ஏற்படுத்திய கிழக்குப் பல்கலைக் கழகம், தமிழ்-முஸ்லிம் கலவரங்களும் பின்னணியில் இருந்தவர்களும், கோணேஸ்வரி படுகொலையை ஞாபகப்படுத்திய S.T.F. அதிகாரி, E.P.D.P. போன்ற கட்சிகளை வளர்த்துவிட்ட விடுதலைப் புலிகள், கிழக்கின் ஊடகத்துறை முன்னோடிகள், சந்திரிக்காவைக் காப்பாற்ற முற்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்பட்ட உதயசூரியன் சின்னம், பொருளியல்துறை தலைவர் தம்பையா படுகொலை, புலிகளிடமிருந்து நடேசனை மீட்ட அவரது அக்கா, விவசாயத்துறையை வளர்த்தெடுத்த பேராசிரியர் ரவீந்திரநாத், வெற்றிபெற்று ஒரு மாதத்தில் கொல்லப்பட்ட நிமலன், முரசொலியில் எனது அனுபவமும் அகிலனின் மரணமும், சந்திரிக்காவின் அபிவிருத்தியும் நிமலராசனின் படுகொலையும், சிவராம் பற்றி எனது பார்வை, தமிழர்கள் மீதான இனப்படுகொலைகள், புனிதர்களாகவும் நீதிமான்களாகவும் மாறிவிட்ட தமிழ் இயக்கங்கள், மட்டக்களப்பு படுவான்கரை கிராமங்களின் விருந்தோம்பல், வடமுனை சிங்கள குடியேற்றமும், எமது பயணமும், ஐரோப்பாவில் முதல் தமிழ் ஊடகம் ஆகிய 29 தலைப்புகளில் இவரது அனுபவப் பகிர்வுகள் அமைந்துள்ளன.