ஒளவையார் (மூலம்), ஆறுமுக நாவலர் (உரையாசிரியர்). கொழும்பு 4: இந்துப் பண்பாட்டு நிதியம், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, 2018. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).
viii, 40 பக்கம், விலை: ரூபா 75.00, அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-9233-86-2.
தமிழ்இலக்கிய வரலாறு பல ஒளவையார்களைக் கண்டபோதும் 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒளவையார், நீதிநூல்களை இயற்றியதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இளமையிற் கற்கவேண்டும், அறநெறிகள் மாறாமல் வாழவேண்டும் என்ற விடயங்களை அகர வரிசையிற் பசுமரத்தாணி போல் மனதிற் பதியுமாறு உணர்த்தியவர் ஒளவையார். மிகத் தெளிவாக நீதிக்கருத்துக்களைப் போதித்தவர். சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும் முறை இவருக்கு கைவந்த கலை என்றால் மிகையில்லை. ஒளவையாரின் நீதிநூல்களின் உண்மையான பயனையும் பெருமையையும் உணர்ந்த ஸ்ரீலஸ்ரீஆறுமுக நாவலர் பெருமான், 1843இல் அந்நூல்களுக்கு உரை எழுதித் தாம் நடத்திவந்த பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்பித்துவந்தார். 40 பாடல்களைக் கொண்டு, சீர்மிகு கருத்துக்களால் நீதிகளைப் புகட்டும், எளிமையான சொற்களும், பொருள்ஆழமும் மிக்க இந்நல்வழி என்னும் நூலும் சிறியோர் மட்டுமல்லாது பெரியோரும் கற்றுணர வேண்டிய நூல் ஆகும். வாழ்க்கையை நாம் நல்லபடி வாழ இவற்றை மனதில் எடுத்துக்கொண்டு வாழ்ந்தாலே போதும் என்கின்ற அளவிற்குத் தன்னுள்ளே பொருள்பொதிந்த கருத்துக்களைக் கொண்டிலங்குகின்றது.