15080 பௌத்தமும் கிறிஸ்தவமும்: இலங்கையில் 1805-1838 காலப்பகுதியில் கிறிஸ்தவ மிசனரிகள் பௌத்தத்தை எதிர்கொண்டமை.

எலிசபெத் ஜே. ஹரிஸ் (ஆங்கில மூலம்), க.சண்முகலிங்கம் (தமிழாக்கம்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

43 பக்கம், விலை: ரூபா 175., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-659-708-5.

இந்நூல் Buddhism and Christianity : Interaction Between East and West என்ற தலைப்பில் 1995இல் வெளிவந்த தொகுப்பு நூலொன்றில் இடம்பெற்ற Elizbth Harris அவர்கள் எழுதிய Crisis and Competition: The Christian Missionary Encounter with Buddhism in the Early 19th Century என்னும் கட்டுரையின் தமிழாக்கமாகும். இந்நூல் 19ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவம் இலங்கையில் பௌத்தத்தை எதிர்கொண்டமை என்ற விடயம் பற்றியது. குறிப்பாக 1805-1838 காலப்பகுதியை இவ்வாய்வு குவிமையப்படுத்துகின்றது. பௌத்த சமயத்தின் பிடியில் இருந்து மனிதரை மீட்க வேண்டும் என்பதில் முழுமையான நம்பிக்கை கொண்டிருந்த மிசனரிகளின் தியாக உணர்வு, கிறிஸ்தவ சமயத்தின் மீது அவர்கள் கொண்டிருந்த ஆழ்ந்த பற்று, இறை நம்பிக்கை, இலங்கையின் அஞ்ஞானிகள் மீது கொண்டிருந்த அன்பு ஆகியவற்றை இந்நூல் வெளிப்படுத்துகின்றது. மேலும், இலங்கையர்கள் தாழ்ந்த இனத்தினர் அல்லர் என்ற எண்ணம் மிசனரிகளின் கல்விக் கொள்கையில் வெளிப்பட்டது என்பதையும் இனவாத அடிப்படையில் மிசனரிகள் இலங்கையின் பிள்ளைகளைத் தாழ்ந்தவர்களாகக் கருதவில்லை என்பதையும் எடுத்துக்காட்டுகின்றது. இவ்வாறு மிசனரிகளின் நல்லியல்புகளை விபரித்துச் செல்லும் இந்நூல் பௌத்தத்தை எதிர்கொள்வதில் மிசனரிகள் எங்கே தவறிழைத்தனர், அவர்களின் பலவீனம் யாது என்பவற்றையும் விபரிக்கின்றது. மூல ஆசிரியர் எலிசபெத் ஹரிஸ் இங்கிலாந்தின் லிவர்பூல் ஹோப் பல்கலைக்கழகத்தின் இறையியல் மற்றும் சமயக் கற்கைகள் துறையில் இணைப் பேராசிரியராக விளங்கியவர். மொழிபெயர்ப்பாளர் க.சண்முகலிங்கம் இலங்கை நிர்வாக சேவையில் (1971-2004) பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக சமூக அறிவியல், கலை, இலக்கியம், பண்பாடு ஆகிய விடயங்கள் குறித்து எழுதி வருகிறார்.

ஏனைய பதிவுகள்