அப்துல் காதர் லெப்பை (மூலம்), அமீர் அலி (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
xviii, 127 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 22.5×15.5 சமீ., ISBN: 978-955-659-557-4.
அப்துல் காதர் லெப்பை (1913-1984) கிழக்கிலங்கையில் காத்தான்குடிக் கிராமத்தை தாயகமாகக் கொண்ட ஒரு ஆசிரிய பெருந்தகையாவார். இலங்கை முஸ்லீம்களின் மூத்த கவிஞரான அப்துல் காதர் லெப்பையின் இதுவரை வெளிவந்த கவிதைகளையும் கட்டுரைகளையும் நுணுக்கமாகப் படித்தவர்களுக்கு அவர் இலங்கை முஸ்லீம்களிடையே வாழ்ந்து மறைந்த ஓர் ஒப்பற்ற சிந்தனையாளன் என்பதும் தத்துவஞானி என்பதும் தெளிவாகும். அவரது சிந்தனைகளும் கருத்துக்களும் இஸ்லாத்தைப் பற்றியும், முஸ்லீம் சமூகத்தைப் பற்றியும் அவை இரண்டினதும் இலட்சியங்கள், நடைமுறைகள் ஆகியன பற்றியுமே சுழன்றன. தான் வாழும் சமூகம், தழுவிய சமயம், பிறந்த நாடு, அதன் அரசியல், அந்த அரசியலில் தனது சமூகத்தின் பங்கு ஆகிய விடயங்களைப் பற்றியே கவிஞரின் சிந்தனை சதா ஓடிக்கொண்டிருந்தது. அவ்வாறான சிந்தனையின் வெளிப்பாடே அவரது கட்டுரைகளும் கவிதைகளும். இந்நூலிலுள்ள கட்டுரைகளும், குறிப்புரைகளும், சிந்தனைத் துணுக்குகளும், சிந்தனைச் சிதறல்களும் அதனையே பிரதிபலிக்கின்றன. நான்கு பகுதிகளில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. முதலாம் பகுதியில் நமது நிலை, இலங்கையில் இஸ்லாம் ஆகிய இரு கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளனர். ”குறிப்புரைகள்” என்ற இரண்டாவது பகுதியில் அச்சமூட்டி எச்சரிக்கை செய்தல், மக்களை சிந்தனையற்ற மந்தைகளாக்குவதற்கு முல்லாக்கள் கையாண்ட முறை, ஹஜ்ஜ{, மௌலூது ஓதுவது (சமூகவியல் நோக்கு), அய்யாமுல் ஜாஹிலிய்யா, அல்லாஹ், அல்லாஹ்-ரசூல்-குர்ஆன்-ஹதீஸ், குர்ஆனும் விளங்காத மக்களும், இஸ்லாம் இயற்கை மதம், ஒரு மனோதத்துவ முடிவு (பொது), தௌஹீத், இஸ்லாம் கூறும் இறைவன் ஒருவன் தனித்துவம், முஸ்லிம் இலக்கியங்கள் ஆகிய 13 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. மூன்றாம் பகுதியில் ஏற்கலாம் விடலாம் என்ற தலைப்பிலான சிந்தனைத் துணுக்குகளும், நான்காவது (இறுதிப்) பகுதியில் சிந்தனைச் சிதறல்களும் இடம்பெற்றுள்ளன.