க.குணராசா. யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234 காங்கேசன்துறை வீதி, 3வது பதிப்பு, ஓகஸ்ட் 1992, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1980, 2வது பதிப்பு, ஓகஸ்ட் 1986. (யாழ்ப்பாணம்: ஸ்ரீகாந்தாஅச்சகம்).
52 பக்கம், விளக்கப் படங்கள், விலை: ரூபா 40.00, அளவு: 21×14 சமீ.
எண்களாகப் பெறப்பட்ட தரவுகளை ஒழுங்குபடுத்தி, ஆராய்ந்து, முடிவுகளைப் பெற்று, ஒரு நாட்டின் பல் துறை சார்ந்த அபிவிருத்திகளுக்குப் பயன்படுத்த உதவும் அறிவியல் துறையாகப் புள்ளிவிபரவியல் (Statistics) விளங்குகிறது. புள்ளி விபரவியலில் தரவுகளே (Data) முதன்மையானவை. நவீன பொருளாதார அமைப்பில், தரவுகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. அதனால், அத் தரவுகளை ஒழுங்குபடுத்தி, ஆராய்ந்து, பொருத்தமான முடிவுகளை எடுக்கவேண்டியது அவசியமாகிறது. ஒரு நாடானது தனது இன்றைய நிலையைப் புரிந்து கொண்டு, எதிர்கால விருத்திக்குத் திட்டமிடுவதற்குப் புள்ளிவிபரவியலாய்வுகள் அத்தியாவசிய தேவையாகும். அவ்வகையில்
அடிப்படைப் புள்ளிவிபரவியலின் எண்ணக் கருக்களை, புவியியல் புள்ளிவிபரவியல் என்ற இச் சிறுநூல் விளக்குகின்றது. ஒழுங்கற்ற தரவுகளை ஒழுங்கு படுத்தி, அவற்றை ஏற்ற வரைபடங்களாக வரைந்து, அவற்றிலிருந்து ஏற்ற முடிவுகளைக் காண்பதற்குரிய செய்முறைகளை இலகுவாக இந்நூல் விபரிக்கின்றது. புவியியல் புள்ளிவிபரவியலில், வரைபடங்கள் பிரதானமானவை. தரவுகளிலிருந்து முடிவுகளைக் கணித முறை மூலம் பெறமுடியும் என்றாலும், படவேலையின் ஓரம்சமாகக் கருதப்படும் புவியியல் புள்ளிவிபரவியலில் இறுதி முடிவுகள் வரைப்படங்களிலிருந்து பெறுவது செய்முறைக் கல்வியின் முக்கிய அம்சம். அதனால், இந் நூல் அந்த அம்சத்திற்கு முதன்மை கொடுத்து ஆக்கப்பட்டுள்ளது. இந்த நூலில் பின்வரும் மூன்று புள்ளிவிபரவியல் நுட்பங்களைக் கற்போம். (1). புள்ளிவிபரத் தரவுகளை ஒழுங்குபடுத்தல். (2). ஒழுங்குபடுத்திய தரவுகளை வரைப்படங்களில் அமைத்தல். (3). அவற்றிலிருந்து பொருத்தமான முடிவுகளைப் பெறுதல். உயர்கல்வி கற்கும் மாணவர்களுக்கு இந்த நூல் பேருதவியாக அமையும். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14557).