கே.ரீ.கணேசலிங்கம். யாழ்ப்பாணம்: அரசியல் சிந்தனை நூல் வரிசை, சமூக விஞ்ஞான ஆய்வு மையம், 28, செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை).
12 பக்கம், விலை: ரூபா 20.00, அளவு: 21×15.5 சமீ.
அமெரிக்காவுக்குச் சார்பாக இருந்த உலக ஒழுங்கு இன்று மடைமாறிவிட்டது. இதற்கு சீனா ஒரு முக்கிய காரணம். ரஷ்யா, ஈரான், வடகொரியா, வெனிசுலா என்பவற்றையும் மேலதிக காரணங்களாகக் குறிப்பிடலாம். சீனா இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் மட்டுமல்ல அதனைத் தாண்டி ஐரோப்பிய, ஆபிரிக்க பிராந்தியங்களிலும் செல்வாக்குச் செலுத்தி வருகின்றது. இந்து சமுத்திரப் பிராந்தியம் சக்தி வளம், வர்த்தகம், கேந்திர முக்கியத்துவம் என்பவற்றைப் பொறுத்து முக்கியமான பிராந்தியமாகும். எதிர்காலத்தில் இப்பிராந்தியத்தில் செல்வாக்குச் செலுத்தும் நாடுகள் உலகில் பலம் பொருந்தியனவாக இருக்கும். எனினும் இப்பிராந்தியத்தில் பெரும் போட்டி சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் தான். அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் இந்தியாவுடன் இணைந்து இப்பிராந்தியத்தில் தமது நலன்களைப் பேண முயற்சிக்கும். இலங்கைத் தீவானது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இருக்கின்றது. வல்லரசுகளுக்கு இலங்கைத்தீவு கேந்திர முக்கியத்துவமானதாக இருக்கின்ற போதும் இந்தியாவுக்கு அதன் தேசிய பாதுகாப்புக்கும் என இரட்டை முக்கியத்துவமானதாக உள்ளது. இதனால் இலங்கைத் தீவை மையமாக வைத்து மிகப் பெரும் புவிசார் அரசியல் போட்டி இடம்பெறுகின்றது. இப்போட்டியில் தமிழ் மக்களுக்கும் முக்கிய பங்கு இருக்கின்றது. துரதிர்ஷ்டவசமாக தமிழ் மக்கள் மத்தியில் இப்புவிசார் அரசியல் பெரியளவில் பேசுபொருளாக இல்லை என்ற கசப்பான உண்மையை இச்சிறு பிரசுரம் முகத்திலறைந்து சொல்கின்றது. யாழ்ப்பாணம், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் அரசியல் சிந்தனை நூல் வரிசையில் 6ஆவது பிரசுரமாக இந்நூல் வெளிவந்துள்ளது.