சி.அ.யோதிலிங்கம். யாழ்ப்பாணம்: அரசியல் சிந்தனை நூல் வரிசை, சமூக விஞ்ஞான ஆய்வு மையம், 28, செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை).
15 பக்கம், விலை: ரூபா 20.00, அளவு: 21×15.5 சமீ.
இந்நூல் இலங்கைத் தீவில் இந்தியாவின் வகிபாகத்தையும் புவிசார் அரசியலில் மலையக மக்களுக்குள்ள முக்கியத்துவத்தினையும் வெளிப்படுத்துகின்றது. அமெரிக்கா உட்பட மேற்குலக வல்லரசுகளுக்கு இலங்கைத் தீவு ஒரு கேந்திர நிலையம் மட்டுமே. ஆனால் இந்தியாவுக்கு இது கேந்திர இடமும் தேசிய பாதுகாப்பிற்கான முக்கிய இடமுமாகும். இலங்கையில் அந்நிய சக்திகளின் பிரசன்னம் இந்திய தேசியப் பாதுகாப்பை எப்போதும் கேள்விக்குட்படுத்தும். எனவே இந்தியா இலங்கைத் தீவில் அந்நிய பிரசன்னத்தை ஒருபோதும் அனுமதிக்காது. இலங்கையில் அந்நிய பிரசன்னம் வரும்போதெல்லாம் இந்திய இராஜதந்திர நகர்வுகள் மூலம் அதனைத் தடுத்து நிறுத்தியிருக்கின்றது. இதற்கான கருவியாக இலங்கைத் தமிழ் மக்களையும் மலையகத் தமிழ் மக்களையுமே பலிகொடுக்கின்றது. சிறீமா சாஸ்திரி ஒப்பந்தம் (1964) மூலம் மலையகத் தமிழர்களைப் பலிகொடுத்தது. பின்னர் இந்திய இலங்கை ஒப்பந்தம் (1987) மூலம் இலங்கைத் தமிழர்களை பலிகொடுத்தது. இதன்போது பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களில் இந்தியா சிறிதளவும் அக்கறை காட்டவில்லை. இன்று சீனப் பிரசன்னம் அதிகமாகியுள்ள சூழலில் மோடியின் மலையகத்துக்கான வருகை மீண்டும் மலையகத் தமிழர்களையும் இலங்கைத் தமிழர்களையும் கருவியாகப் பயன்படுத்த முயல்கின்றது என்பதைக் காட்டுகின்றது. இந்நிலையில் வட-கிழக்கு மக்களும் மலையக மக்களும் பரஸ்பர நலன்கள் என்ற புதிய உறவின் அடிப்படையில் இந்தியாவுடன் உறவுகளைக் கையாளவேண்டும் எனவும் அதற்கான மூலோபாயங்களையும் தந்திரோபாயங்களையும் கண்டடைய வேண்டும் என்றும் இந்நூல் வலியுறுத்துகின்றது. யாழ்ப்பாணம், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் அரசியல் சிந்தனை நூல் வரிசையில் 6ஆவது நூலாக இந்நூல் வெளிவந்துள்ளது.