சி.அ.யோதிலிங்கம். யாழ்ப்பாணம்: அரசியல் சிந்தனை நூல் வரிசை, சமூக விஞ்ஞான ஆய்வு மையம், 28, செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை).
12 பக்கம், விலை: ரூபா 20.00, அளவு: 21.5×16 சமீ.
யாழ்ப்பாணம், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் அரசியல் சிந்தனை நூல் வரிசையில் 7ஆவது நூலாக இந்நூல் வெளிவந்துள்ளது. 2017ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 05ஆம் திகதி தமிழ் மக்கள் பேரவையினால் நடாத்தப்பட்ட ஆய்வரங்கில் அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் ஆற்றிய உரையின் செம்மைப்படுத்தப்பட்ட பிரதி இதுவாகும். தமிழ் மக்கள் தமது கூட்டிருப்பையும் கூட்டுரிமையையும் கூட்டடையாளத்தையும் பேணுவதற்கு வடக்கு-கிழக்கு இணைப்பு மிக அவசியமாகும். அதைவிட கிழக்கைப் பாதுகாப்பதற்கும் இவ்விணைப்பு அவசியமானதாகும். இது அரசியல் தீர்வின் அடிப்படையாகும். எவ்வித பேரம் பேசலுக்கும் அப்பாற்பட்டது என்பதை இந்நூல் வலியுறுத்துகின்றது. மேலும், வட-கிழக்கு என்பது தமிழ் மக்களின் தாயகம் மட்டுமல்ல. முஸ்லீம் மக்களின் தாயகமும் அதுவாகும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்பதையும் இந்நூல் கோடிட்டுக் காட்டுகின்றது. ஆயினும், முஸ்லீம்கள் வட-கிழக்கு இணைப்பிற்குள் வருவதற்குத் தயாரில்லை. இந்நிலையில் மாற்றுத் தெரிவை நோக்கிச் செல்ல வேண்டிய கட்டாயம் தமிழ்த் தரப்பிற்கு ஏற்பட்டுள்ளது. அந்த மாற்றுத் தெரிவு என்பது கிழக்கிலுள்ள தமிழ்ப் பிரதேசங்களை நிலத் தொடர்ச்சியற்ற வகையில் வடக்குடன் இணைப்பதாகும் என்கிறார். இம்மாற்றுத் தெரிவில் பல சாதக பாதகமான அம்சங்கள் இருக்கலாம் எனவும் அவை பற்றிய பரஸ்பர உரையாடல்கள் உடனடியாக அவசியமாகின்றது என்றும் இந்நூலில் வலியுறுத்துகின்றார்.