ரூபன் சிவராஜா. சென்னை 600 042: யாவரும் பப்ளிஷர்ஸ், 214, புவனேஸ்வரி நகர் 3வது மெயின் ரோடு, வேளச்சேரி, 1வது பதிப்பு, ஜனவரி 2020. (சென்னை 600 042: யாவரும் பப்ளிஷர்ஸ்).
360 பக்கம், விலை: இந்திய ரூபா 450., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-93-881336-2-3.
ரூபன் சிவராஜாவால் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைத்தொகுப்பில் கடந்த பத்து ஆண்டுகளில் நடைபெற்ற சர்வதேச அரசியல் விவகாரங்கள் குறித்த 50 கட்டுரைகள் இடம்பெறுகின்றன. இவை ஏற்கனவே காக்கை சிறகினிலே மற்றும் தினக்குரல், வீரகேசரி பத்திரிகைகளில் வெளியாகி முகநூலிலும் பிரசுரிக்கப்பட்டவை. கடந்த ஆண்டுகளில் உலகில் நடைபெற்ற பல தேசிய எழுச்சிப்போராட்டங்களையும், அவை உருவாகக் காரணமாக இருந்த இன, மத சமூக காரணிகளையும் பல கட்டுரைகள் மூலம் அலசுவதோடு நிற்காமல் அவற்றை உருவாக்கிய வல்லரசுகளின் உள்நோக்கங்கள் மற்றும் நுண் அரசியல் காரணிகள் பற்றியும் விபரித்து எழுதி இருக்கிறார். உலக அரசியல் அரங்கில் எந்தெந்த யுத்தங்கள் எத்தனை ஆண்டுவரை என்னென்ன காரணங்களைக் காட்டி இழுத்தடிக்கப்பட்டன, கூடவே எந்தெந்த தேசிய விடுதலை போராட்டங்கள் விடுதலை அடைய வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் புவிசார் சர்வதேச நலன்சார் அரசியல் காரணிகள் மற்றும் வல்லரசுகளின் வெளியுறவுக் கொள்கையை நிர்ணயம் செய்யும் அதிகார நலன் சார் அரசியல் நகர்வுகள் பற்றியும் ஆழமாக இந்நூலில் ரூபன் சிவராஜா ஆய்வு செய்திருக்கிறார். பனிப்போருக்கு பின்னரான காலத்தில் எதிரும் புதிருமாக திகழும் உலகின் இரு வல்லரசுகளாக விளங்கும் அமெரிக்கா மற்றும் ரஸ்யா எப்படியெல்லாம் தங்கள் பிராந்திய நலன்சார் அரசியல் நகர்வுகளை முன்னெடுக்க தங்கள் ஆடுகளமாக மத்திய கிழக்கில் இருக்கும் நாடுகளை பாவிக்கின்றன என்பதை சிரியா பகுதி -1 பகுதி 2 பகுதி 3 ஆகிய கட்டுரைகள் மூலம் தெளிவுபடுத்தி இருக்கிறார்.