15200 இளம்பிறையும் எடைத் தராசும்: இலங்கை-அரேபிய தொடர்புகள் பற்றிய ஆய்வு.

ரோஹித்த தசநாயக்க (சிங்கள மூலம்), ஹாஸிம் பாத்திமா பிர்தௌஸியா (தமிழாக்கம்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xviii, 188 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 850., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-745-5.

இந்நூல் கி.பி.15ஆம் நூற்றாண்டு வரையில் இலங்கை-அரேபியர் இடையில் நிலவிய வர்த்தக உறவுகளைப் பற்றிய (இலக்கிய மற்றும் தொல்பொருள் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட) ஒரு வரலாற்று ஆய்வாகும். இவ்வாய்வின் மூலம் இந்து சமுத்திரத்தினூடாக கிழக்கு-மேற்கு வர்த்தகத்தில் ஈடுபட்ட இன்னோரன்ன நாடுகள் பற்றியும் பல்வேறு இனத்தவர்கள் பற்றியும் பல தகவல்கள் அறியக் கிடைத்துள்ளதுடன் இவ்வர்த்தகத்தில் அச்சாணியாய்த் திகழ்ந்த பெறுமதிமிக்க பொருளாதாரப் பயிர்கள் உட்பட ஏனைய பொருளாதார வளங்கள் தொடர்பாகவும் விளக்கங்களைப் பெறமுடிகின்றது. கி.பி. ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பம் முதலாக 15ஆம் நூற்றாண்டு வரையில் நிலவிய இலங்கை-மேற்காசியா இடையிலான வர்த்தக நடவடிக்கைகளை அரிய பல அராபிய இலக்கிய மூலாதாரங்களையும் இலங்கை மட்டுமன்றி எகிப்து, இந்தியா, பாரசீகத் தொல்பொருள் சான்றுகளையும் அடிப்படையாகக் கொண்டும் விவரித்துள்ளமை இந்நூலின் சிறப்பம்சமாகும். மேலும் இந்நூலானது இலங்கைவாழ் முஸ்லிம் சமூகத்தவரது குடியேற்றப் பரவல், பண்பாட்டுச் செல்வாக்குகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய பல்வேறு வரலாற்று நிகழ்வுகளையும் அடையாளப்படுத்துகின்றது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை சிரேஷ்ட விரிவுரையாளரான ரோஹித்த தசநாயக்க ”அண்ட சந்த சஹ தராதிய” என்ற பெயரில் எழுதிய ஆய்வுநூலை அவரது மாணவியான எச்.எப்.பிர்தௌஸியா (தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சமூக விஞ்ஞானங்கள் துறையின் விரிவுரையாளர்) தமிழாக்கம் செய்துள்ளார். மூலாதாரப் பரிசீலனை, இலங்கை மற்றும் மேற்காசியாவுக்கிடையிலான தொடர்புகளின் ஆரம்பமும் வளர்ச்சியும், மத்திய கால இஸ்லாமிய யுகம் – கி.பி. 10-13ஆம் நூற்றாண்டுகள், பௌதிக மற்றும் ஆன்மிக நோக்கங்களுடன் இணைந்த முஸ்லிம்களது சிவனொளிபாத மலைக்கான யாத்திரை, முடிவுரை ஆகிய ஐந்து இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்