தவப்பிரபா சச்சிதானந்தம். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
x, 110 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-727-1.
நாட்டின் பொருளாதார விருத்திக்குப் பாரியளவில் பங்கினைச் செலுத்தும் சுற்றுலாத்துறை, உலகில் காணப்படும் முக்கிய வர்த்தகத் துறைகளில் ஒன்றாக விளங்குகின்றது. இச்சுற்றுலாத் துறையானது பாரிய சுற்றுலா (Mass Tourism), மாற்றுமுறைச் சுற்றுலா (Alternative Tourism) என்று இருவகையாகப் பிரிக்கப்படுகின்றது. பாரிய சுற்றுலா சூழலிலும், சமூகத்திலும், கலாசாரத்திலும் பல்வேறுபட்ட தாக்கங்ளை ஏற்படுத்தி வந்தமையால், மாற்றுமுறைச் சுற்றுலாத்துறை என்ற நவீன வடிவம் சுற்றுலாத் துறையில் தோற்றம் பெற்றது. இம்மாற்று முறைச் சுற்றுலாவின் ஒரு வடிவமான சூழல்சார் சுற்றுலாத் துறையினை அறிமுகம் செய்து அதன் அடிப்படைகளை விளக்குவதுடன் அதனை எவ்வாறு விருத்தி செய்யலாம், அதற்கும் நிலையான அபிவிருத்திக்கும் இடையிலான தொடர்பு, சூழல்சார் சுற்றுலாத் துறையால் ஏற்படும் தாக்கங்கள், சூழல்சார் சுற்றுலா மையங்களைச் சார்ந்து அமைக்கப்படும் விடுதிகள் எவ்வாறு அமைக்கப்படவேண்டும் என்பவை தொடர்பாக இந்நூலில் உள்ள எட்டு இயல்களும் பேசுகின்றன. சூழல்சார் சுற்றுலா அறிமுகம், சூழல்சார் சுற்றுலா வரைவிலக்கணங்கள், சூழல்சார் சுற்றுலாவின் அடிப்படைகள், சூழல்சார் சுற்றுலா விடுதி, சூழல்சார் சுற்றுலா மற்றும் நிலையான அபிவிருத்தி என்பவற்றுக்கிடையிலான தொடர்பு, இலங்கையில் சூழல்சார் சுற்றுலா, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபையின் சூழல்சார் சுற்றுலாவுக்கான வழிகாட்டல்கள், சூழல்சார் சுற்றுலாத் துறையால் ஏற்படும் தாக்கங்கள் ஆகிய தலைப்புகளில் இவ்வியல்கள் அமைந்துள்ளன. நூலாசிரியை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் புவியியல்துறையில் சிறப்புக் கற்கையை மேற்கொண்டு முதல் தரத்தில் இளமாணிப் பட்டத்தையும், பின்னர் முதுதத்துவமாணிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டவர். அதே பல்கலைக்கழகத்தில் புவியியல்துறை விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார்.