15276 யாழ்/மல்லாகம் மகா வித்தியாலயம்: 150ஆவது ஆண்டு நினைவு மலர் 1860-2010.

மலர்க் குழு. யாழ்ப்பாணம்: மல்லாகம் மகா வித்தியாலயம், மல்லாகம், 1வது பதிப்பு, 2010. (யாழ்ப்பாணம்: ஜெயஸ்ரீ பிறின்டர்ஸ், 83, கல்லூரி வீதி, நீராவியடி).

xxii, 201 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18 சமீ.

அமெரிக்க மிஷனரிமாரின் கிறீஸ்தவ போதனைகளுக்கான போட்டியின் மத்தியில் சைவ மாணவருக்கான கல்வியின் அவசியத்தை கருத்திற்கொண்டு மல்லாகம் மகா வித்தியாலயம் 1860ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாவட்டத்தின் மல்லாகம் பங்களா ஒழுங்கைக்கு வடக்கே ஒரு தற்காலிக கட்டிடத்தில் இப் பாடசாலை ஆரம்பமானது. பின்னர் சு.துரையப்பா அவர்கள் 1890ஆம் ஆண்டளவில் மல்லாகம் பழம்பிள்ளையார் கோவிலுக்கு வடகிழக்காகவுள்ள பிராமண வளவில் ஆறு பரப்பு நிலத்தை அந்தணர் சீனிவாசகம் என்பவரிடம் கிரயமாகப்பெற்று ஒரு நீளமான கட்டிடத்தை கட்டுவித்து மல்லாகம் ஆண்கள் பாடசாலையென ஆரம்பித்தனர். 1945ஆம் ஆண்டில் இப் பாடசாலை மல்லாகம் கலவன் ஆங்கில பாடசாலையாக மாறியது. 1961ஆம் ஆண்டு மார்கழி மாதம் 15ஆம் திகதி அரசாங்கத்திற்கு சொந்தமான இப் பாடசாலை 1973ஆம் ஆண்டில் மல்லாகம் மகா வித்தியாலயமாக பெயர் மாற்றப்பட்டதோடு 1989 ஆம் ஆண்டு முதல் G.C.E.(A/L) கலை வகுப்புக்களும் ஆரம்பிக்கப்பட்டது. 2010இல் 150ஆவது ஆண்டை கொண்டாடம் இப்பாடசாலையின் சிறப்ப மலர் இதுவாகும். ஆசியுரைகள், வாழ்த்துரைகள், பாடசாலை அறிக்கைகள், பாடசாலை வரலாறு பற்றிய கட்டுரை, மற்றும் ஆசிரியர், மாணவர்களின் ஆக்கங்கள் என்பனவற்றுடன் வெளியாகியுள்ள இப்பெருந் தொகுப்பில் வித்தியாலய அன்னையின் பாதச்சுவட்டில், கல்வியாளர்களின் படைப்புக்கள், பாடசாலை ஆசிரியர்களின் படைப்புக்கள், மாணவர்களின் படைப்புக்கள், ஏனையவை ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் 111 ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21100).

ஏனைய பதிவுகள்