மா.அருள்சந்திரன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xxii, 119 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 600., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-719-6.
இந்நூல் இன்று முக்கியத்துவம் இழந்த மாட்டுவண்டில் பண்பாடு, அன்று யாழ்ப்பாணச் சமூகத்தில் எத்தகைய முக்கிய நிலையில் இருந்ததென்பதை அறிய வழிவகுக்கின்றது. 1955இற்கு முன் உழவு இயந்திரம் பயன்பாட்டிற்கு வரும் முன்னரும் கார், லொறி, வான், போன்றவற்றின் பயன்பாடு மிகக் குறைவாக இருந்த காலத்திலும் யாழ்ப்பாணத்தில் மாட்டு வண்டில் பயன்பாடு முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. நூலாசிரியர் தனது ஆய்வில் பல்வேறு வகை மாட்டு வண்டில்கள் பற்றியும் அவற்றுடன் தொடர்புபட்ட தொழில்நுட்பங்கள், கலையம்சங்கள், உற்பத்தியாளர்கள் பற்றியெல்லாம் மிகவும் தெளிவாக புகைப்படங்களுடன் எழுதியுள்ளார். யாழ்ப்பாணப் பிரதேச மக்களின் கடந்தகால சமூகப் பொருளாதார பண்பாட்டு வரலாற்றை அறிய இது ஒரு முக்கிய ஆதார நூலாகும். மாட்டு வண்டில்-ஓர் அறிமுகம், யாழ்ப்பாணத்து இலக்கியங்களும் மாட்டு வண்டிலும், யாழ்ப்பாணப் பகுதி மாட்டு வண்டிலின் பண்புகள், மாட்டு வண்டிலின் பயன்பாடுகள், இயந்திர வாகனப் பயன்பாட்டுக்குப் பின்னர் மாட்டு வண்டிலின் நிலை ஆகிய ஐந்து இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. மார்க்கண்டு அருள்சந்திரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இளமாணிப் பட்டத்தையும் பண்பாட்டுக் கற்கையில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றவர் ஈழத்தின் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தின் பண்பாட்டு அடையாளங்களைப் பேணிப் பாதுகாத்துப் பதிவு செய்வதில் அதிக ஆர்வத்துடன் உழைத்து வருபவர்.