த.சண்முகசுந்தரம். தெல்லிப்பழை: அருள் வெளியீட்டகம், மாவை கந்தசாமி கோயிலடி, 1வது பதிப்பு, மே 1986. (தெல்லிப்பழை: குகன் அச்சகம்).
iv, 28 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 10.00, அளவு: 18×12 சமீ.
யாழ்;ப்பாணத்துப் பொதுமக்களின் முக்கியமான பொழுதுபோக்குகளில் ஒன்று மாட்டுச் சவாரி. இச் சவாரிப் போட்டியைப் பல்லாயிரக் கணக்கான மக்கள் பார்த்து மகிழ்வர். இந்த மாட்டுச் சவாரியை விரும்பாத பெரியோர் பலர் யாழ்ப்பாணத்தில் இருந்தனர். யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர் அவர்களுள் ஒருவர். மத நம்பிக்கையில் எருது சிவபெருமானின் வாகனம் எனவும் எருதை வண்டியில் பூட்டிச் சவாரி ஓட்டும்போது அதனை அடித்து ஊசியால் குத்தி, வாலை முறுக்கிக் கடித்துத் துன்புறுத்துவதை நாவலர் பெருமான் விரும்பவில்லை. இது வெறும் ஒட்டம் மட்டுமன்று. இது தனிப்பெரும் சமுதாய விழாவாக தமிழர் மத்தியில் கொண்டாடப்பட்டது. இந்நூல் சவாரி மாட்டைப் பழக்கி எடுப்பதில் இருந்து இந்தச் சவாரிக் கலையை விலாவாரியாக கட்டம் கட்டமாக விளக்குகின்றது. முதலாவது கட்டம் கன்றைத் தெரிவு செய்தல், இரண்டாவது கட்டம் கன்றைத் தேற்றுதல் அல்லது கொழுக்கச் செய்தல், மூன்றாவது கட்டம் மூக்கணாம் கயிற்றை இடுதல் அதாவது நாணயக் கயிறு குத்துதல், நான்காவது கட்டம் நாம்பனுக்கு ஏர் வைத்தல். இது பெரும்பாலும் நல்ல நாளில் நடக்கும். இதற்கெனப் பஞ்சாங்கங்களில் நாள் குறிக்கப்பட்டிருக்கும். ஐந்தாவது கட்டம் நாம்பனுக்கு ஆண்மை நீக்கம் குறி சுடுதல் என்பன. ஆறாவது கட்டம் கைக் கயிற்றில் நடத்துதல். இதுவரையில் வயலில், கமத்தில், வீட்டில், புலத்தில் நடத்திப் பழக்கப்பட்ட நாம்பன் தெருக்களில் பயிற்சிக்காக நடத்தப்படும். அதாவது மக்கள் கூட்டம், வண்டிப் போக்குவரத்து என்பனவற்றைக் கண்டு வெருளாமல் இருக்கவே இந்தப் பயிற்சி நடைபெறும். ஏழாவது கட்டத்தில் ‘கடைக்கிட்டி பிடித்து” வண்டியில் மாடு பூட்டப்படும், வண்டி நுகத்தில் நுனியில் ஒருவர் பிடிப்பார். இவரின் வழிகாட்டலில் மாடு வெருளாமல் நேராகச் செல்லப் பழகும். வண்டில் ஓட்டி நாணயக் கயிறு மூலம் விடுக்கும் கட்டுப்பாட்டையும் குரல் மூலம் உணர்த்தும் கட்டளைகளையும், துவரந்தடி அடி மூலம் வழங்கும் தண்டனைகளையும் மாடு ஏற்கப் பழகும். எட்டாவது கட்டத்தில் மாடு சவாரிக்குத் தயாராகும். கிராமத்து மட்டத்தில் இருந்து வந்த இக் கலைக்கு உயர்நிலையை அளித்தது யாழ்ப்பாணத்தில் ‘தினகரன்” நாள் ஏடு நடத்திய போட்டியாகும். இப் போட்டியின் பயனாக இக்கலை நாட்டில் பெரும் மதிப்பைப் பெற்றது. இதுவரை காலமும் இப்போட்டியின் விதிகள் வாய்ச் சொல்லாகவே இருந்து வந்தன. இப் போட்டியின் பயனாகப் போட்டி விதிகள் யாவும் நிரை செய்யப்பட்டன. அறுபதுகளில் நடந்த இப் போட்டிகள் இக்கலையின் நிலையை உயர்த்தின. “ஈழநாடு” நாளேடு நடத்திய போட்டிகள் மிகவும் சிறப்பாக நடந்தன. 1974இல் நடந்த அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு இக்கலையை அனைத்து உலக நிலைக்கு உயர்த்தியது. அதுவரை யாழ்ப்பாணத்து மக்கள் மட்டும் பார்த்துச் சுவைத்த இப்போட்டியை வெளிநாடுகளில் இருந்து வந்த பார்வையாளர் பார்த்துப் பாராட்டினர். இந்நூலின் இறுதியில் யாழ்ப்பாணத்து மாட்டுவண்டிச் சவாரியில் ஈடுபட்ட பலரினதும் விபரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 9470).