வடிவேல் இன்பமோகன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
xxvii, 215 பக்கம், விலை: ரூபா 750., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-659-714-1.
இந்த நூல் இலங்கைத் தமிழ் மக்களின் வழக்காறுகளைச் சேகரித்து ஆராய்ந்து புதிய முடிவுகளை நல்கக் கூடியதாக உள்ளது. இலங்கைத் தமிழர்களின் நாட்டுப்புறத் தெய்வ வழிபாடுகளின் இன்றைய நிலை குறித்தும், நாட்டுப்புற இலக்கியங்கள், கூத்துகள், சடங்குகள் வெளிப்படுத்தும் மக்கள் உணர்வுகள் குறித்தும் தீர்க்கமான முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளது. நான்கு பேராசிரியர்களின் ஆய்வுத் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. எதிரகாலத்தில் விரிவான தமிழ் நாட்டுப்புறவியல் வரலாறு எழுதப்படுமேயானால் அதில் இலங்கை அறிஞர்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கதாக இருக்கும். குறிப்பாக அதில் இந்நூற் கட்டுரைகளை எழுதிய அறிஞர்களின் பெயர்களும் இடம்பெறும். நான்கு ஆய்வறிஞர்களை ஒருங்கிணைத்து அவர்களின் சிறந்த கட்டுரைகளைப் பதிப்பித்து நூலாக்கம் செய்துள்ளார் கலாநிதி வடிவேல் இன்பமோகன். இவர் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தனது இளமாணிப் பட்டத்தையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுதத்துவமாணிப் பட்டத்தினையும் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றவர். தற்போது கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நுண்கலைத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். “வேர்கள் மறந்த விருட்சங்கள்: யாழ்ப்பாணத்து சிறுதெய்வ மரபு குறித்த கருத்துநிலை” (பேராசிரியர் வ.மகேஸ்வரன்), “நாட்டுப்புறவியலும் பனுவலாக்க அரசியலும்” (பேராசிரியர் இ.முத்தையா), “இலங்கைத் தமிழ் நாட்டார் வழக்கியல்: ஆதிக்கக் கருத்தியல்கள்-ஒடுக்குமுறைகள்-மாற்றுக் குரல்கள்” (கலாநிதி சி.சந்திரசேகரம்), “மலையகத் தமிழரின் கிராமிய வழிபாட்டு மரபுகள்” (எம்.எம்.ஜெயசீலன்) ஆகிய நான்கு ஆய்வுக் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.